என் அம்மாகிட்ட இதை மட்டும் நான் சொன்னதே இல்லை.. இப்போது சொல்கிறேன்.. உருக்கமாக பேசிய பேரறிவாளன்!
சென்னை: என் அம்மா அற்புதம் அம்மாளின் தனிப்பட்ட வாழ்க்கையை உறிஞ்சிவிட்டோமே.. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை திருடிவிட்டோமே என்ற வேதனை இருந்தது.. என்று பேரறிவாளன் உருக்கமாக பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்வதற்காக உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரம் 142-வது பிரிவைச் செயல்படுத்தி உள்ளது. 31 வருடமாக சிறையில் இருந்த பேரறிவாளன் இன்று விடுதலை ஆகியுள்ளார்.
பேரறிவாளன் விடுதலையில் பெருமகிழ்ச்சி...மற்ற அறுவரையும் விடுவிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
பேரறிவாளன் பேட்டி
இந்த நிலையில் தீர்ப்பை தொடர்ந்து பேரறிவாளன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது, ஆரம்ப காலங்களில் என் அம்மா நிறைய அவமானங்களை சந்தித்து இருக்கிறார். நிறைய போராட்டங்களை சந்தித்து இருக்கிறார். நிறைய அவமதிப்புகளை சந்தித்து இருக்கிறார். எங்கள் பக்கம் நியாயம் இருந்தது. நீதி இருந்தது. அதுதான் எங்களுக்கு இந்த போராட்டத்திற்கான வலிமையை கொடுத்தது என்று நான் கூறுவேன். போராடுவதற்கான பலத்தை கொடுத்தது என்று கூறுவேன். அதுதான் எங்களுக்கு வெற்றியை கொடுத்துள்ளது.
என்னுடைய வாழ்க்கை
நான் என்னுடைய வாழ்க்கையில்.. மாக்சிம் கார்க்கியின் தாய் புத்தகத்தை 4 முறை படித்து இருக்கிறேன். சின்ன வயதில் 18-19 வயதில் முதல்முறை படித்துள்ளேன். அதன்பின் சிறையில் படித்து இருக்கிறேன். பின் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட போது படித்து இருக்கிறேன். ஒவ்வொரு காலகட்டத்தில் அது எனக்கு ஒரு உணர்வை கொடுத்துள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு உணர்வை அது கொடுத்துள்ளது.
அம்மாவுடன் ஒப்பீடு
ஒரு காலகட்டத்திற்கு பின் என் அம்மாவுடன் அதில் இருக்கும் விஷயங்களை நான் ஒப்பிட ஆரம்பித்தேன். என் அம்மாவின் போராட்டத்துடன் அதை ஒப்பிட்டு இருக்கிறேன். ஆனால் அதை நான் அம்மாவிடம் சொல்லவில்லை . எங்களிடையே இருக்கும் இயல்பான உறவுக்கு எதுவும் ஆக கூடாது என்று நான் சொன்னது இல்லை. அம்மாவின் போராட்டத்துடன் நான் அப்படி ஒப்பிட்டதை அவரிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். இன்று சொல்லிவிட்டேன்.
போராட்ட வெற்றி
அவரின் போராட்டத்திற்கான வெற்றி இது. என் தாயை போலவே என் அப்பா.. என் சகோதரிகள்.. என் அக்காவின் கணவர், என் தங்கையின் கணவர் ஆகியோரின் போராட்டம். ஆதரவு. அவர்களின் பலம்தான்.. என்னை காத்தது. அவர்கள் கொடுத்த ஆதரவுதான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. சட்ட போராட்டத்தின் போது என் அம்மாவை பார்க்க நான் அஞ்சுவேன்.
வருத்தம்
அவர்கள் ஒவ்வொரு முறை விழுகிறாரே.. எனக்காக கஷ்டப்படுகிறாரே.. அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை உறிஞ்சிவிட்டோமே.. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை திருடிவிட்டோமே என்ற வேதனை இருந்தது எனக்கு. அதை எல்லாம் தாண்டி நான் இப்போது இருக்கிறேன். அவர்கள் உயிருடன் இருக்கும் போதே நியாயம் வெல்ல வேண்டும் என்று நினைத்தேன். இது எங்கள் குடும்பத்தின் போராட்டம் மட்டுமல்ல.
எல்லோருக்கும் நன்றி
ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் செய்த போராட்டம். வாழ்க்கையின் காலகட்டத்தில் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் எல்லோரையும் சந்தித்து நன்றி கூறுவேன். செங்கொடியின் தியாகம், தியாகராஜன் IPSன் வாக்குமூலம், நீதியரசர்கள் கிருஷ்ணய்யர், கே.டி.தாமஸ் அவர்களால்தான் நான் இங்கு நிற்கிறேன். அவர்கள் எல்லோருக்கும் நன்றிகள், என்று பேரறிவாளன் குறிப்பிட்டு உள்ளார்.