பெரியார் சிலை அவமதிப்பு- வன்முறையை தூண்டியது சீமான்- குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி தபெதிக மனு
சென்னை: சென்னையில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் (Seeman Periyar) தூண்டிவிட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட வேண்டும்; அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கோவை ராமகிருட்டிணனின் தந்தை பெரியார் தி.க. புகார் மனு அளித்துள்ளது.
சென்னை ஜாபர்கான்பேட்டையில் சில நாட்களுக்கு முன்னர் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. தந்தை பெரியார் சிலையை காலணியால் அடித்ததாக ஒரு நபர் பொதுமக்களால் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அந்த நபர் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அஜ்ய் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து சீமானுக்கு எதிராக மதிமுக மற்றும் பெரியார் இயக்க தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது சீமான் படத்தை காலணிகளால் அடித்தும் உருவப்படத்தை எரித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கோவை ராமகிருட்டிணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் (தபெதிக) நேற்று ஒரு புகார் மனு அளித்தனர். அதில், பெரியார் தொண்டர்கள் மீது வெடிகுண்டுகளை வீசுவேன் என சீமான் பேசினார்; அதனைத் தொடர்ந்து சென்னையில் பெரியார் சிலையை நாம் தமிழர் கட்சியின் அஜய் என்பவர் அவமதித்தார்; இதற்கு காரணம் சீமான்தான். சீமான் வன்முறையை தூண்டிவிட்டதாலேயே சென்னையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது; ஆகையால் சீமானை கைது செய்ய வேண்டும்; அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசியதால் சீமான் மீது ஏற்கனவே தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் சீமான் தொடர்ந்தும் தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசி வருகிறார். இதனால் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியார் இயக்கத்தினர் தமிழக அரசை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications