பெருங்களத்தூர் மேம்பாலம் நாளை திறப்பு.. மூச்சுவிட்ட பீர்க்கங்கரணை.. வெளியூர் செல்வோருக்கு இனிமே ஜாலி
சென்னை: பெருங்களத்தூர் மேம்பாலம் நாளை திறக்கப்படுகிறது.. இதனால் வெளியூர் செல்பவர்களுக்கு இனி எந்த பிரச்சனையும் இருக்காது என்று நம்பப்படுகிறது.
பெருங்களத்தூர் பகுதியை, சென்னை மாநகரின் நுழைவு வாயில் என்பார்கள்.. சென்னைக்கு வெளியே உள்ள புறநகர் பகுதி என்றாலும், முக்கியமான கல்லூரிகள் இந்தப் பகுதியில்தான் இயங்கி வருகின்றன.. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஒருபக்கமும், டெக்னாலஜி மறுபக்கமும் என பெருங்களத்தூரே பிஸியாகி விட்டது..
அலர்ஜி: இதனால், வாகன நெரிசல் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது.. மற்றொருபுறம், பெருங்களத்தூர் ரயில் நிலையம் பகுதியில் மேம்பாலங்களும் இல்லை என்பதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் நிறையவே சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். எனவேதான், கடந்த 2020ம் ஆண்டு, 234 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டின்மூலம் அந்த பகுதியில் மேம்பாலங்கள் கட்டும் பணி ஆரம்பமானது..

மேம்பாலம் திறப்பு: பழைய ரயில்வே மேம்பாலத்தை இடித்து அகற்றிவிட்டு சுமார் ரூ.25.7 கோடியில் புதிய மேம்பாலம் கட்டத் திட்டமிடப்பட்டது. 2.4 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட உள்ள இந்த மேம்பாலத்தில் இருபுறமும் சேர்த்து எட்டு வழி பாதையாக அமைக்கவும் திட்டமிடப்பட்டது.
அந்த வகையில் சென்னை - திருச்சி தேசியநெடுஞ்சாலையில், பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகில், மாநில நெடுஞ்சாலைத் துறை, ரயில்வே இணைந்து ரூ.234 கோடியில், மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதி ஜி.எஸ்.டி., சாலையில், செங்கல்பட்டு- தாம்பரம் மார்க்கமான ஒரு வழிப்பாதை கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டது..
பீர்க்கன்கரணை: ஆனாலும், பெருங்களத்தூரிலிருந்து சீனிவாசன் நகர் செல்லும் ரயில்வே கிராசிங் மேம்பால பணிகள் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து நெடுங்குன்றம் மார்க்கமாக செல்லும் மேம்பால பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்றன. இதனால், சீனிவாசா நகர், முடிச்சூர், ஆர் எம் கே நகர் , பீர்க்கன்கரணை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செல்லும் வாகன ஓட்டிகள், தாம்பரம் மற்றும் வண்டலூர் செல்வதற்கு சுமார் 4 முதல் 5 கிலோமீட்டர் வரை சுற்றி செல்லும் நிலைமை ஏற்பட்டது.

இப்போதுதான், பீர்க்கன்கரணை சீனிவாசா நகரில் இறங்கும் மற்றொரு பாதைக்கான பணிகள் ஒருவழியாக கட்டி முடிக்கப்பட்டு விட்டது.. ஆனாலும், சில காரணங்களால் திறக்கப்படாமல் இருக்கவும், இந்த மேம்பாலத்தை விரைவில் திறக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுக்க தொடங்கின.. ஆனால், இந்த பகுதிகளில் மின்இணைப்பு பெறுவது உள்ளிட்ட நடைமுறை சிக்கல்களால், பாலத்தை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுக்கொண்டேயிருந்தது..
நாளை திறப்பு: தற்போது அந்த பணிகள் அனைத்தும் முடியும் தருவாயுக்கு வந்துவிட்டன.. எனவே, பெருங்களத்தூர் மேம்பாலத்தின் மற்றொரு பகுதியை நாளை அதாவது ஜுன் 28ம் தேதி திறக்கப்பட உள்ளது... அமைச்சர் தா.மோ அன்பரசன் சீனிவாசா நகர் பாதையை, மக்கள் பயன்பாட்டுக்கு நாளை மாலை 3:00 மணிக்கு திறந்து வைக்கிறார்.












Click it and Unblock the Notifications