வீரர்களுக்கு அஞ்சலி.. தமிழகம், புதுவையில் இன்று இரவு 15 நிமிடம் பெட்ரோல், டீசல் வினியோகம் நிறுத்தம்
சென்னை: வீரமரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று இரவு 15 நிமிடங்கள் விற்பனை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் 2500 சிஆர்பிஎஃப் வீரர்களுடன் கான்வாய் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது 350 கிலோ வெடிப்பொருடன் மற்றொரு காரில் வந்த தீவிரவாதி கான்வாய் மீது மோதி வெடிப்பொருள்களையும் வெடிக்கச் செய்தார்.
இதில் 40 வீரர்கள் உயிரிழந்துவிட்டனர். தமிழகம் முதல் கேரளம் வரை தலா ஒரு மகனை இந்தியா இழந்துள்ளது. தமிழகத்தில் இருவர் வீரமரணமடைந்துள்ளனர்.
வீரமரணமடைந்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த பெட்ரோல் பங்க் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
அதன்படி இன்றிரவு 8 மணி முதல் 8.15 மணி வரை பெட்ரோல் பங்க்களில் விளக்குகள் அணைக்கப்படுகிறது. அந்த நேரத்தில் பெட்ரோல் பங்க் விற்பனை 15 நிமிடங்களுக்கு நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.