Plus 2 revision: மேலும் இரு வினாத்தாள்கள் லீக்.. பள்ளிக் கல்வித் துறை விளக்கத்தால் மாணவர்கள் நிம்மதி
சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வின் வினாத்தாள்கள் லீக்கானது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஒரு விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம் மாணவர்களும் பெற்றோர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.
10- ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புகளுக்கான முதற்கட்ட திருப்புதல் தேர்வு இந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. பொதுத் தேர்வு போல் கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாள் பயன்படுத்தப்படுகிறது.
உயிரியல், வணிகவியல் பாடங்களுக்கான வினாத்தாள்கள், தேர்வுக்கு முதல் நாளே சமூகவலைதளங்களில் கசிந்து வந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளிலிருந்து வினாத்தாள் லீக்கானது தெரியவந்தது.
அடுத்தடுத்து கசியும் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள்..2 தனியார் பள்ளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை
கல்வித் துறை ஆணையர்
சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொன்னூர் காவல்நிலையத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருள்செல்வம் புகார் அளித்தார். இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் கூறுகையில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுகள் நடக்கும் முன்னர் சமூகவலைதளங்களில் வினாத்தாள் வெளிவந்ததாக ஊடகங்கள் வழியே அறியப்பட்டது.
ஆக்ஸிலியம்
இதுகுறித்து, துறைரீதியாக விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், திருவண்ணாமலை மாவட்டம், போலுார் ஆக்ஸிலியம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மற்றும் வந்தவாசி ஹாசினி இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளி ஆகியவற்றில் இருந்து, வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது கண்டறியப்பட்டது.
தனியார் பள்ளிகள்
இதற்கு காரணமான பள்ளிகளை சேர்ந்த நபர்கள் மீது, தக்க குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தேர்வுகள் நடத்துவது குறித்து, தேர்வு துறை இயக்குனர் அளித்த வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாத அரசு அலுவலர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே வெளியிட்ட அட்டவணைப்படி, திருப்புதல் தேர்வுகள் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து நடக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வணிக கணிதம் பாடப்பிரிவு
இந்த நிலையில் இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கு வணிக கணிதம் பாடப்பிரிவுக்கான தேர்வு நடைபெறவிருந்தது. இந்த தேர்வு நடப்பதற்கு முன்னதாக அதன் வினாத்தாளும் சமூகவலைதளங்களில் லீக்காகியுள்ளது. ஏற்கெனவே உயிரியல், வணிகவியல் வினாத்தாள்கள் கசிந்துள்ளதால் இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் தலைமையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளிக் கல்வித் துறை விளக்கம்
நாளை நடைபெறவிருந்த இயற்பியல் வினாத்தாளும் தற்போது லீக்காகியுள்ளது. இன்று ஒரே நாளில் வணிக கணிதம், இயற்பியல் வினாத்தாள்கள் கசிந்துள்ளது. இதனால் நியாயமாக தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் வினாத்தாள் லீக் குறித்து பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்காகவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும். மாணவர்களும் பெற்றோர்களும் வினாத்தாள் லீக் குறித்து அஞ்ச வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.