மெட்ரோ ரெயில் சேவை உள்பட பல திட்டங்கள் தொடக்கம்...ரூ3,640 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய மோடி!
சென்னை: சென்னையில் நடந்த விழாவில் பல்வேறு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கலும் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.
விழாவில் பேசிய பிரதமர் மோடி நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய தமிழக விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமருக்கு முதல்வர், துணை முதல்வர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
பாஜகவின் திட்டம்
தமிழகத்தில் பல்வேறு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று காலை சுமார் 7.30 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். காலை 10.30 மணியளவில் அவர் சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அங்கு தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்.
முதல்வர் உற்சாக வரவேற்பு
பின்னர் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்திற்கு சென்றார். அங்கு பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் உள்ளிட்ட அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் இருந்து நேரு விளையாட்டரங்கத்துக்கு காரில் புறப்பட்டார் பிரதமர் மோடி.
பாஜக, அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
சாலையின் இருபுறமும் திரண்டு இருந்த பாஜக, அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். கட்சி கொடிகளுடன் வரவேற்பு கொடுத்த அதிமுக, பாஜக தொண்டர்களை பார்த்து பிரதமர் மோடி காரில் இருந்தபடி கையசைத்தார். தொண்டர்களின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் பிரதமர் மோடி நேரு உள்விளையாட்டரங்கம் சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடியை தமிழக அமைச்சர்கள் வரவேற்றனர்
அர்ஜூன் மார்க் 1 ஏ கவச வாகனம் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
அப்போது அங்கு சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், புதிய வசதிகளுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து ராணுவத்திடம் ஒப்படைத்தார். ராணுவ தளபதி எம்எம் நரவனே மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். அர்ஜூன் மார்க் 1 ஏ கவச வாகனத்தை மோடி பார்வையிட்டார். பின்னர் விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் விழா மேடையில் வைக்கப்பட்டு இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவருக்கு கிருஷ்ணர் சிலையை வழங்கினார்.
ஓபிஎஸ், இ.பி.எஸ். புகழாரம்
அதன்பின்னர் விழா தொடங்கியதும் துணை முதல்வர் ஓபிஎஸ் வரவேற்புரையாற்றினார். பாரத தேசத்தின் பாதுகாவலர், பாமரர்களின் சேவகர் பிரதமர் மோடி ஜி என ஓபிஎஸ் பிரதமருக்கு புகழாரம் சூட்டினார். பிரதமர் தமிழகத்தில் நிறைவேற்றிய திட்டங்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்தார். பின்னர் விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், கோவையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கபப்டும் என்று கூறினார்.
மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்
பின்னர் ரூ.3770 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட வண்ணாரப்பேட்டை-விம்கோநகர் மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.சுமார் 9 கி.மீ. நீளமுள்ள இந்த மெட்ரோ ரெயில் பாதையானது, வடசென்னை பகுதியை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ரூ.293.40 கோடியில் அமைக்கப்பட்ட சென்னை கடற்கரை மற்றும் அத்திப்பட்டு இடையிலான நான்காவது ரெயில் பாதையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். ரூ.423 கோடியில் மின்மயமாக்கப்பட்ட விழுப்புரம்- கடலூர்- மயிலாடுதுறை -தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை- திருவாரூர் இடையிலான ஒற்றை வழி ரெயில் பாதையில் மின்மயமாக்களையும் பிரதமர் மோடி செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
டிஸ்கவரி வளாகத்துக்கு அடிக்கல் நாட்டினார்
இதனை தொடர்ந்து 1,000 கோடியில் சென்னை ஐஐடியின் தையூர் டிஸ்கவரி வளாகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் ரூ1,000 கோடி செலவில் டிஸ்கவரி வளாகம் அமைக்கப்படுகிறது. மேலும், கல்லணை கால்வாய் சீரமைப்பு-புதுப்பித்தல் திட்டத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடி மொத்தம் ரூ3,640 கோடி மதிப்பிலான திட்டங்களுக்குஅடிக்கல் நாட்டினார்.
தமிழகத்துக்கு பாராட்டு
அதன்பின்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய தமிழக விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். பின்னர் விழா மேடையிலேயே முதல்வர், துணை முதல்வரும் கரம் கோர்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பிரதமர் மோடி. இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள், பாஜக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். விழா நடைபெறும் இடத்துக்கு அருகிலும், அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.