தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள்.. காணொலியில் திறந்து வைத்த பிரதமர் மோடி!
சென்னை: தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கொரோனா பரவலை அடுத்து பிரதமர் மோடியின் தமிழக வருகை ரத்தாகியுள்ளது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் 37 உள்ளன. இதில் 5,125 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன.

மருத்துவக் கட்டமைப்பை விரிவுபடுத்தவும், கூடுதலான மருத்துவ மாணவர்களை சேர்க்கவும் வசதியாக புதிய மருத்துவ கல்லூரிகளைத் தொடங்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதில் தமிழகத்துக்கு 11 மருத்துவ கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன.
மருத்துவ கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களை தேர்வு செய்து அந்த மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்து திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவ கல்லூரி வீதம் 11 மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதற்கான பணிகள் நடைப்பெற்று முடிந்துள்ளது.
ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 150 மாணவர்கள் வீதம் 1,650 மாணவர்களை சேர்ப்பதற்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியதோடு அனைத்து கல்லூரிகளையும் மத்திய குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது. அந்த ஆய்வின்போது சில குறைகள் சுட்டிக்காட்டப்பட்டது. அவற்றையும் தமிழக அரசு சீர் செய்ததை அடுத்து கல்லூரிகளை தொடங்க மருத்துவ கவுன்சில் அனுமதியளித்து உத்தரவிட்டது.
இதையடுத்து இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி விருதுநகர் மாவட்டத்திற்கு வந்து 11 மருத்துவக் கல்லூரிகளை நேரடியாக வந்து தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நேரில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு காணொலி காட்சி மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி இன்று மாலை 4 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 11 மருத்துவமனைகளை தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பிரதமர் மோடி வணக்கம் என தமிழில் உரையாற்றினார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிற பழமொழியை சுட்டிக்காட்டி மோடி உரையாற்றினார். அதோடு பொங்கல், மகரசங்கராந்தி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அதிக அளவிலான மருத்துவ கல்லூரிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. ஒரே நாளில் ஒரே மாநிலத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்படுவது தமிழகத்தில்தான். உ.பி.யில் சில நாட்களுக்கு முன்னர் 9 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்தேன். தமிழகத்தில் மேலும் 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்து என் சாதனையை முறியடித்துள்ளேன், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
முன்னதாக மருத்துவக் கல்லூரி தொடக்க விழாவுடன் பாஜக சார்பில் மோடி பொங்கல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பிரதமர் மோடியின் பொங்கல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.