சென்னை ஃபோர்டு ஆலை மூடல்.. பல்லாயிரம் பேர் வேலையிழப்பு.. முதல்வருக்கு, முக்கிய கோரிக்கை வைத்த ராமதாஸ்
சென்னை: அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனம் ஃபோர்டு, சென்னையிலும், குஜராத்திலும் செயல்பட்டு வரும் கார் ஆலைகளை மூட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஃபோர்டு கார் ஆலை மூடப்படுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

வருத்தமளிக்கிறது
சென்னை மறைமலைநகரிலும், குஜராத்திலும் செயல்பட்டு வரும் ஃபோர்டு கார் ஆலைகளை மூட முடிவு செய்திருப்பதாக, அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையிலான இந்த முடிவு வருத்தமளிக்கிறது; இது திரும்பப்பெறப்பட வேண்டும். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் புகழ்பெற்ற ஃபோர்டு கார் நிறுவனம் இந்தியாவில் சென்னையிலும், குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் சனந்த் நகரிலும் கார் ஆலைகளைத் தொடங்கி நடத்தி வருகிறது.

15 ஆயிரம் கோடி இழப்பு
இந்த ஆலைகளில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறி, அவற்றை மூடப்போவதாக அறிவித்து உள்ளது. குஜராத் ஆலை இந்த ஆண்டு இறுதிக்குள்ளும், சென்னை ஆலை அடுத்த ஆண்டிலும் மூடப்படவுள்ளன. இந்த ஆலைகள் மூடப்பட்டால் நேரடியாக 8,000 பணியாளர்களும், மறைமுகமாக 30 ஆயிரம் பணியாளர்களும் வேலையிழப்பார்கள். இது அவர்களின் வாழ்வாதாரத்துக்கு மட்டுமின்றி, தமிழகம், குஜராத் மாநிலங்கள் மற்றும் இந்தியப் பொருளாதாரத்துக்கும் மிகப்பெரிய இழப்பாக அமையும்.

சாத்தியமற்றவை
இரு கார் ஆலைகளையும் தொடர்ந்து இயக்குவதற்கான பல்வேறு வாய்ப்புகளை ஆராய்ந்ததாகவும், அவை சாத்தியமற்றவை என்பது உறுதியானதால் தான் கார் ஆலைகளை மூடுவதற்கான முடிவை எடுத்ததாகவும் ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் முடிவு பற்றி விவாதிப்பதோ, விமர்சிப்பதோ இந்தத் தருணத்தில் சரியானதாக இருக்காது. ஆனால், இந்த முடிவால் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என்பதும், அவர்களில் பெரும்பான்மையினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

தமிழக அரசு
அதனால், பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக இரு ஆலைகளையும் தொடர்ந்து இயக்குவதை உறுதி செய்வது உள்ளிட்ட அனைத்து சாத்தியக் கூறுகளையும் தமிழகம் - குஜராத் மாநில அரசுகளும், மத்திய அரசும் ஆராய வேண்டும். தமிழகத்தில் ஏற்கெனவே நோக்கியா நிறுவனம் திருப்பெரும்புதூரில் செயல்பட்டு வந்த செல்பேசி உற்பத்தி ஆலை மூட முடிவெடுத்த போது, அம்முடிவை மாற்றுவதற்காக மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பணி நீக்கம்
அதனால், அந்த ஆலையில் பணியாற்றி வந்த நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடைசி வரை பணியில் இருந்த சுமார் 800 பேருக்கு மட்டும் தான் அதிகபட்சமாக ரூ.7.50 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது. நோக்கியா ஆலை மூடப்பட்டதால் வேலை இழந்தவர்களுக்கு இன்று வரை சரியான வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை அவர்களின் வாழ்வாதார இழப்பை எந்த வகையிலும் ஈடு செய்யவில்லை.

பொறுப்பு உண்டு
அதே போன்ற நிலை ஃபோர்டு கார் ஆலைகளின் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. அவ்வாறு ஏற்படாமல் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், மகாராஷ்டிரா மாநிலம் தாலேகோன் நகரில் அமைத்துள்ள அதன் கார் ஆலையை மூடுவதற்கான முயற்சிகளை கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்தே தொடங்கியது. கடந்த ஆண்டில் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டு தொகையையும் அறிவித்தது.

வாழ்வாதாரம்
ஆனால், அதை ஏற்காத தொழிற்சங்கங்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, கார் ஆலையை மூடுவதற்கான அனுமதியை மகாராஷ்டிரா அரசு வழங்கவில்லை. தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்ட பிறகும் கூட ஆலையை மூட அனுமதிக்கப்படவில்லை. ஃபோர்டு பணியாளர்களின் வாழ்வாதாரம் கருதி தமிழக அரசும் அத்தகைய நிலையை எடுக்க வேண்டும்.

லாபத்தில் இயங்கலாம்
இந்தியாவில் உள்ள ஃபோர்டு ஆலைகளை தொடர்ந்து இயக்கச் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளன. இந்திய கார் சந்தையில் ஃபோர்டு நிறுவனத்தின் பங்கு 2 விழுக்காடுக்கும் குறைவு என்பது உண்மை. இதற்கான காரணம். ஃபோர்டு கார்களின் விலை அதிகம் என்பது தான். அதே நேரத்தில், ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்யும் கார்களை இந்தியாவில் விற்பனை செய்வதை விட, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது ஃபோர்டு நிறுவனம் அதன் வணிக உத்திகளில் சில மாற்றங்களைச் செய்யும் பட்சத்தில் ஆலையை லாபத்தில் இயக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தொழில்துறை அதிகாரிகள்
எனவே, சென்னை ஃபோர்டு ஆலையை தொடர்ந்து இயங்கச் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அந்த நிறுவனத்துடன் தமிழக தொழில்துறை அதிகாரிகள் பேச்சு நடத்த வேண்டும். ஒருவேளை அது சாத்தியமாகவில்லை என்றால், கார் ஆலை தொழிலாளர்களுக்கு, அவர்கள் மனநிறைவு அடையும் வகையில் தமிழக அரசு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும். ஃபோர்டு ஆலை வேறு ஏதேனும் மகிழுந்து நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டால், புதிய நிர்வாகத்தில் இப்போதுள்ள பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications