முடிவே கிடையாதா? ஆன்லைன் ரம்மியால் 33வது பலி! எப்போது வரும் தடை சட்டம்.. அனல் காட்டிய பாமக அன்புமணி!
சென்னை : தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு 33வது பலியாக ஒடிஷா மாநில பெண் உயிரிழந்துள்ள நிலையில், இனியும் தாமதிக்காமல் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது; 2021 பிப்ரவரியில் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டம் செல்லாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.
ரத்து செய்யப்பட்ட சட்டத்திற்கு எதிராக புதிய சட்டம் இயற்ற வேண்டும் என தமிழகத்தில் தொடர்ந்து கோரிக்கை குரல்கள் ஒருபுறம் எழுப்பப்பட்டு வந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறதா?.. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
ஆன்லைன் ரம்மி
நீண்ட காலமாக அந்த மசோதா கிடப்பில் இருந்த நிலையில், அது தொடர்பான கோரிக்கைகளால் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மசோதா சட்டமாக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் இச்சட்டம் காலாவதி ஆகிவிட்டது. இதனயடுத்து சில ஆன்லைன் ரம்மி ஆப்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.
வடமாநில பெண்
இந்நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேலாயுதபுரத்தில் ஒடிசா மாநிலம் பட்ராக் பகுதியைச் சேர்ந்த அஜய் குமார் மண்டல். இவரது மனைவி பந்தனா மஜ்கி வசித்து வந்தனர். இருவரும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் நடைபெற்று மூன்று ஆண்டுகள் முடிந்த நிலையில் அஜய்குமார் மண்டல் மனைவி பந்தனா ஆன்லைன் விளையாட்டில் ரூபாய் 70 ஆயிரம் பறிகொடுத்ததாக கூறப்படுகிறது.
ரம்மியால் தற்கொலை
இதனை அடுத்து கணவர் அஜய் குமார் மண்டல் மனைவி பந்தனாவை கண்டித்துள்ளார் இதில் விரக்தி அடைந்த மனைவி பந்தனா நேற்று வேலைக்கு செல்லாமல் தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து அறிந்த கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் விரைந்து சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பந்தனா உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
33வது பலி
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு 33வது பலியாக ஒதிஷா என்ற பெண் உயிரிழந்துள்ள நிலையில், இனியும் தாமதிக்காமல் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர்,"தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.
அன்புமணி ராமதாஸ்
ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை!
ஒப்புதல் அளிக்க வேண்டும்
ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது! ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணர வேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்!" என பதிவிட்டுள்ளார்.