பாமக மகளிர் மாநாடு: பூரண மதுவிலக்கு உட்பட நிறைவேற்றப்பட்ட 14 முக்கிய தீர்மானங்கள்.. முழு விவரம்
மயிலாடுதுறை: பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பூம்புகாரில் நடைபெற்ற மகளிர் பெருவிழா மாநாட்டில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. பறை, தவில் இசை நிகழ்ச்சி, பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டியது. அதைத்தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸ் உரையாற்றினார். மாநாட்டின்போது கனமழை கொட்டித் தீர்த்தது. மாநாட்டு மேடையைச் சுற்றி மழைநீர் சூழ்ந்த நிலையில் மழைநீரை வெளியேற்றும் பணியில் பாமக தொண்டர்கள் ஈடுபட்டனர்.

மாநாட்டில், தமிழக பூரண மதுவிலக்கு, பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பது, பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பது, மது, போதைப் பொருட்களால் ஏற்படும் சீரழிவிலிருந்து பாதுகாப்பது போன்ற முக்கிய நோக்கங்களைக் கொண்டு மாநாடு நடைபெற்றது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மகளிர் மாநாடு நடைபெற்றது. ராமதாஸின் மகள் காந்திமதி முதல் தீர்மானத்தை வாசித்தார். இந்த மாநாட்டில், பெண்களுக்கான பாதுகப்பு, வேலைவாய்ப்பு, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பாமக மகளிர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
1. பெண்களுக்கு வேலைவாய்ப்பில்லா திண்டாட்டம் நீங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும்.
3. முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.
4. தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனையை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. நீட் தேர்வுக்கு செல்லும் மாணவிகள் சோதனை என்ற பெயரில் மன வேதனைக்கு உள்ளாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
6. பள்ளிகளில் நடைபெறும் பெண் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அங்கு பெண் காவலர்கள் நியமிக்க வேண்டும்.
7. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் கிராமப்புற நகர்ப்புற ஏழை எளிய பெண்களின் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த வேலை நாட்களின் எண்ணிக்கையையும், தினக் கூலியையும் அதிகரிக்க வேண்டும்.
8. மாணவிகள் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வி பெற கூடுதல் மகளிர் பல்கலைக் கழகங்கள் தனியாக உருவாக்க வேண்டும்.
9. தமிழ்நாட்டில் நடுத்தர குடும்பத்துப் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய் கொடுமைகள் அதிகரித்து வருவதால் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்.
10. வன்னியர்களுக்கு 10.5 % இட ஒதுக்கீட்டை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல் அனைத்து சமுதாயத்திற்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
11. தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவை சரியாக நிர்ணயித்து சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்
12. தமிழ்நாட்டின் காவிரி பாசன டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கப்பட வேண்டும்.
13. பூம்புகார் பகுதி மீனவர்கள் மற்றும் மீன்பிடி துறைமுக மீனவர்கள் உள்ளிட்ட தமிழ்நாடு மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
14. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications