பாமக கட்சி அலுவலகம் முகவரி மோசடி.. ஜி கே மணி பகீர் குற்றச்சாட்டு.. வழக்கறிஞர் பாலு கொடுத்த ரீப்ளே
சென்னை: அன்புமணி ராமதாஸ் பத்திரிகைகளுக்கு கொடுக்கும் அறிக்கையில் நம்பர் 10 திலக் தெரு, தி.நகர் என்றுதான் இருக்கும் என்றும், டாக்டர் ராமதாஸ் ஒப்புதலுடன் வழங்கப்பட்ட உறுப்பினர் கார்டிலும் தி.நகர் முகவரிதான் இருக்கும் என்று ஜி. கே. மணி குற்றச்சாட்டுக்கு பாலு விளக்கம் அளித்துள்ளார். முகவரி மோசடி என்று ஜி. கே. மணி குற்றம் சாட்டிய நிலையில் அன்புமணி தரப்பு பாலு இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.
பாமகவில் தந்தை மகன் மோதல் உச்சமடைந்துள்ளது. பாமக யாருக்கு சொந்தம் என்பதில் இருவரும் மாறி மாறி கூட்டங்கள் நடத்தி உரிமை கொண்டாடி வருகிறார்கள். அன்புமணி இனி 'எனது ராமதாஸ்' என்ற பெயரை இனிஷியலாக மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்து விட்டார். இதற்கு அமைதி காத்து வந்தார் அன்புமணி.

முகவரியை மாற்றி மோசடி
இந்த நிலையில், அன்புமணியை பாமக தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டது என்று நேற்று வழக்கறிஞர் பாலு கூறியிருந்தார். இது ராமதாஸ் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாமக முன்னாள் தலைவராக இருந்த ஜி. கே. மணி முகவரியை மாற்றி அன்புமணி மோசடி செய்வதாக புகார் தெரிவித்தார்.
தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜி. கே. மணி, "பாமகவின் நிரந்தர முகவரி தேனாம்பேட்டை என்பது எல்லாருக்குமே தெரியும். அதை திசைதிருப்பி முகவரியை மாற்றியிருக்கிறார்கள். இது பெரிய மோசடி செய்தி. முகவரியை மாற்றி ஏமாற்று வேலை செய்கிறார்கள். தலைவர், பொதுச்செயலாளர் பெயரில் கடிதம் எழுதுவது மிகப்பெரிய மோசடி. தலைவருக்குத்தான் மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் தான் தலைவர். முகவரி மாற்றியதால் தலைவர் மாறியதாக சொல்வது மோசடி என்று வெட்ட வெளிச்சமாகிவிட்டது" என்று கூறியிருந்தார்.
வழக்கறிஞர் பாலு விளக்கம்
இந்த நிலையில் ஜி. கே. மணி குற்றச்சாட்டுக்கு அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "முகவரி மோசடி என்று ஜி. கே. மணி சொல்கிறார். திடீரென்று நேற்று தான் தெரிந்தது என்று சொல்கிறார். 25 வருடம் கட்சியின் தலைவராக இருந்தவர். பல்வேறு தருணங்களில் சட்டமன்றத்தில் கட்சிக்காக பேசியவர், இப்படியெல்லாம் அபாண்டமாக பேசுவது என்பது கவுரவத் தலைவருக்கு கவுரவமா என்று கேட்க விரும்புகிறேன்.
2022 ஆம் ஆண்டு கட்சியின் தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட்ட பிறகு 01.06.2022-ல் தேர்தல் ஆணையத்துக்கு நாங்கள் கொடுத்த கடிதத்தில், 63 நாட்டு முத்து நாயக்கன் தெருவை இந்த 10 திலக் நகராக மாற்றி கடிதம் கொடுத்து இருந்தோம். அப்போதிலிருந்து கட்சியின் தலைமை அலுவலக முகவரியாக இந்த தி.நகர் முகவரிதான் இருந்து வருகிறது.
இது நேற்றைய செய்தி கிடையாது
அன்புமணி ராமதாஸ் பத்திரிகைகளுக்கு கொடுக்கும் அறிக்கையிலும் நம்பர் 10, திலக் தெரு, தி.நகர் என்றுதான் இருக்கும். டாக்டர் ராமதாஸ் ஒப்புதலுடன் பாமக உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டது. அதற்கான பணி மேற்கொள்ளப்பட்டது. அதிலும் தி.நகர் முகவரிதான் இருக்கும். தேர்தல் ஆணையம் சார்பில் பல வருடங்களாக தி.நகர் முகவரிக்குதான் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜி. கே. மணி ஏதோ, நேற்று தான் திடீரென தெரிந்தது போல, பதட்டமாகி விட்டோம் என்று சொல்கிறார். அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு குற்றச்சாட்டுதான் அலுவலக முகவரியை மாற்றிவிட்டதாக கூறுவது. எனவே இது நேற்றைய செய்தி கிடையாது... பழைய செய்தி. அலுவலக முகவரி மாற்றப்பட்டது எல்லோருக்கும் தெரியும்.
விழுப்புரம் மாவட்டம் என ஏன் இருந்தது?
உண்மையான முகவரி 63 நாட்டு முத்து நாயக்கன் தெரு என்றால், தைலாபுரத்தில் உறுப்பினர் அட்டை சேர்க்கையின்போது ஜி கே மணி தூக்கிப்பிடித்த கார்டில் தைலாபுரம், விழுப்புரம் மாவட்டம் என ஏன் இருந்தது?.. 63 நாட்டு முத்து நாயக்கன் தெரு என இப்போது சொல்வவர், தைலாபுரம் என மாற்றி எப்படி செய்தி வெளியிட முடியும்?" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications