செல்லாது செல்லாது.. ராமதாஸின் பொதுக் குழு! பாமக விதி 15,16 சொல்வதென்ன? ஆதாரத்தை காட்டும் அன்புமணி
சென்னை: பாமகவில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நீடித்து வரும் நிலையில் டாக்டர் ராமதாஸ் புதுச்சேரியில் தனது ஆதரவாளர்களை கூட்டி நேற்று பொதுக்குழுவை நடத்தியுள்ளார். டாக்டர் ராமதாஸ் தரப்பினர் இது பாமகவின் பொதுக்குழு என்று சொல்லி வரும் நிலையில் அன்புமணி தரப்பில் புதுச்சேரியில் இன்று நடைபெற்ற கூட்டத்திற்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனபதோடு, கட்சி விதி 15 மற்றும்16 சுட்டிக்காட்டி ராமதாஸுக்கு பொதுக்குழுவை கூட்ட அதிகாரமே இல்லை என்கின்றனர்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அக்கடசியின் தலைவர் டாக்டர் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நீடித்து வருகின்றது. இந்த நிலையில் பாமக தலைவராக இருந்து வந்த டாக்டர் அன்புமணியின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில் இந்த மாதம் ஒன்பதாம் தேதி மாமல்லபுரத்தில் பாமக சட்டப்படி பொதுக்குழுவை கூட்டி அன்புமணி மீண்டும் அக்கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புதுச்சேரியில் தன்னுடைய ஆதரவாளர்களை அழைத்து பொதுக்குழு என கூட்டத்தை நடத்தியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
அந்தக் கூட்டம் அவர்கள் தரப்பில் பொதுக்குழு கூட்டம் என சொல்லப்பட்டாலும், அன்புமணி தரப்பிலிருந்து வழக்கறிஞர் பாலு விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி நேற்று நடைபெற்ற கூட்டத்திற்கும் பாமகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், இன்றைய கூட்டம் எந்த வகையிலும் பாமகவை கட்டுப்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஒன்பதாம் தேதி அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முறைப்படி டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாமக பொதுக்குழு
டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவருமே தாங்கள் நடத்தியது தான் உண்மையான பொதுக்குழு என கூறி வரும் நிலையில் தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிகள் படியும் அக்கட்சியின் விதிகள் படியும் யார் நடத்தியது உண்மையான பொதுக்குழு கூட்டம் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அதற்கு சில விளக்கங்களும் கிடைத்துள்ளது.
பாமக விதி
சட்ட விதிகளின்படி ஒரு கட்சியில் உச்சபட்ச அதிகாரம் என்பது பொதுக்குழுவிற்கு மட்டுமே உள்ளது. பாமகவில் தற்போது சுமார் 3500 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ள நிலையில் அவர்களில் 95 சதவீதம் பேர் அன்புமணி பக்கம் தான் உள்ளனர். மிக சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே டாக்டர் ராமதாசுடன் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த ஒன்பதாம் தேதி அன்புமணி தலைமையில் நடைபெற்ற பாமக பொது குழுவில் அக்கட்சியின் முறைப்படி தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று தீர்மானங்களை நிறைவேற்றிக் கொடுத்தனர்.
ராமதாஸ்
ஆனால் புதுச்சேரியில் இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களை கிடையாது.. இன்னும் சொல்லப்போனால் கட்சியின் உறுப்பினர்களே இல்லாதவர்களும் கல்லூரி மாணவர்களும் பொதுக்குழுவில் அதிக அளவில் இருந்ததை காணமுடிந்தது.
யாருக்கு அதிகாரம்?
இது ஒரு புறம் இருக்க அக்கட்சியின் சட்ட விதி 13 இன் படி பொதுக்குழு கூட்டத்திற்கு பாமக நிறுவனர் அழைக்கப்பட வேண்டும் என்று மட்டுமே உள்ளது. தவிர அவர் பங்கேற்றால் மட்டும்தான் அந்த பொதுக்குழு செல்லும் அவர் பங்கேற்கவில்லை என்றால் அந்த பொதுக்குழு செல்லாது போன்ற எந்த வரிகளும் இல்லை. அதன்படி பார்த்தால் அன்புமணி நடத்திய பொது குழு கூட்டத்திற்கு கட்சியை நிறுவனருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் பங்கேற்கவில்லை என்றாலும் அது பொதுக்குழுவை எந்த வகையிலும் பாதிக்காது என்பதை சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாமக விதி 15,16
மேலும் விதி 15 மற்றும் 16 ன் படி அக்கட்சியின் தலைவர் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளருக்கு உச்சபட்ச அதிகாரம் உள்ளது. எனவே இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அக்கட்சியின் உடைய பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் மற்றும் பொருளாளர் திலகபாமா ஆகியோர் தற்போது அன்புமணி பக்கம் நிற்பதனால் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்திற்கு சென்றாலும் அன்புமணி தரப்பு தான் வெற்றி பெறும் என சுட்டிக்காட்டுகின்றனர்.
ராமதாஸ் தரப்பு
ஏற்கனவே அன்புமணி நடை பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என காவல்துறையை நாடி அதிலும் ராமதாஸ் தரப்பு தோல்வியை தழுவியது. மேலும் ஒன்பதாம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற பொது குழு கூட்டத்தை தடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியும் தோல்வியை கட்டியது. இதன் மூலமாக டாக்டர் அன்புமணி தரப்பு வலுவாக உள்ளதை தான் காட்டுவதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாமக பெயர், கொடி, சின்னம்
தன்னுடைய தந்தையின் மனம் நோகக்கூடாது என்பதற்காகத்தான் அரசியல் மேடைகளில் அன்புமணி அவரை விமர்சிப்பதில்லை என்றும் மேலும் டாக்டர் ராமதாஸுக்கு எதிராக செயல்பட வேண்டாம் என்பதற்காகத் தான் பாமக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதில் இருந்து தடை கோர நீதிமன்றத்தை நாடாமல் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் ஆணையம்
கட்சியை உருவாக்கியவர் டாக்டர் ராமதாஸ் ஆக இருந்தாலும். பாமக ஒரு தனிநபருக்கான சொத்து கிடையாது தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையம் சொல்லும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும். இந்தியாவில் செயல்படும் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் அந்த கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் யாரை தலைவராக அங்கீகரிக்கிறார்களோ அவர்கள் தன் கட்சியின் தலைவராக செயல்பட முடியும் என்பது விதியாக உள்ளது.
பெரும்பான்மை உறுப்பினர்கள்
இதற்கு முன்பு அதிமுக விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே பிரச்சனை எழுந்தபோதும் பெரும்பான்மை நிர்வாகிகள் இபிஎஸ் பக்கம் நின்றதால் தற்போது கட்சி அவர் பக்கம் வந்துள்ளது. இது தவிர உத்தர பிரதேசம், பிஹார் போன்ற இடங்களில் அங்குள்ள மாநில கட்சிகளில் தந்தை மகன் இடையே பிரச்சனை ஏற்பட்ட போதும் இறுதியில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இருந்த அணி தான் கட்சியை வழிநடத்தும் அணியாக இருந்துள்ளதையும் சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அன்புமணி தான் பாமக
அதன்படி தற்போது பெரும்பான்மை பொதுக்குழ உறுப்பினர்களையும் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களையும் தன் பக்கம் வைத்திருக்கும் அன்புமணி நடத்துவது தான் உண்மையான பாமக என்றும் அவரது தந்தை நடத்துவது அவரது ஆதரவாளர்கள் கூட்டம் என்றும் அன்புமணி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications