மது எவ்வளவு மோசமானது.? தொடரும் குடிபோதை படுகொலைகள்! மதுக்கடைகளை மூடுவது எப்போது? - அன்புமணி கேள்வி
சென்னை : மதுவிலக்கை செயல்படுத்துவதற்கான கால அட்டவணையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும், குடிபோதையில் தந்தையே இரு மகள்களை உடுட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், " திருப்பெரும்புதூரைஅடுத்த சின்ன மதுரப்பாக்கத்தில் குடிபோதையில் தந்தையே இரு மகள்களை உடுட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மது எவ்வளவு மோசமானது... அழகான குடும்பங்களை அது எவ்வாறு சீரழிக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு தான் எடுத்துக்காட்டு ஆகும்.

மதுவால் கொலை
குடும்பத்தலைவரின் குடிப்பழக்கத்தால் குடும்பங்கள் சீரழிவதற்கு இது மட்டுமே ஒற்றை எடுத்துக்காட்டு அல்ல. ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு குடும்பம் மதுவால் சீரழிந்து கொண்டு தான் இருக்கிறது. குடியால் குழந்தைகளின் உணவு, கல்வி, எதிர்காலம் பறிக்கப்படுகின்றன.

தமிழக அரசு டாஸ்மாக்
தமிழக அரசின் டாஸ்மாக் வருமான உயர்வும், குடும்பங்களின் மகிழ்ச்சியும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க முடியாது. மது வருமானம் உயர, உயர ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் சீரழிவது அதிகரிக்கும். இந்த உண்மையை தெரியாதது போலவே தமிழக அரசு நடந்து கொள்ளக் கூடாது.

மதுவிலக்கு எப்போது
தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் தமது நோக்கம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அதை செயல்படுத்துவதற்காக நேரம் வந்து விட்டது. எனவே, இனியும் தாமதிக்காமல் மதுவிலக்கை செயல்படுத்துவதற்கான கால அட்டவணையை அரசு அறிவிக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

பாமக முயற்சி
" கடவுள் என் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் ஒரு சொட்டு மது இல்லாத, ஒரு சொட்டு தண்ணீர் வீணாக கடலில் கலக்காத தமிழ்நாட்டை உருவாக்கித் தர வேண்டும் என்று தான் கேட்பேன்'' என மருத்துவர் அய்யா அவர்கள் பலமுறை கூறியிருக்கிறார். அதற்காகத் தான் மருத்துவர் அய்யா அவர்கள் 40 ஆண்டுகளாக போராடி வருகிறார்" என ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications