முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரிக்கவந்த அமைச்சர் எ.வ.வேலு! மருத்துவமனை வாசலில் போலீஸ் அனுமதி மறுப்பு
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரிப்பதற்காக காவேரி மருத்துவமனை வந்த அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழக மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12-ம் தேதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் பக்கத்தில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் கொரோனா பாதிப்புக் காரணமாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரின் உடல்நிலை குறித்து கண்காணித்து, பரிசோதித்து மேற்கொண்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தனர். விரைந்து நலம்பெறவும் வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் முதலமைச்சரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார் என்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடன் அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு நலம் விசாரிப்பதற்காக அமைச்சர் எ.வ.வேலு வந்துள்ளார். அவரை மருத்துவமனை வாசலிலேயே தடுத்து நிறுத்திய காவல்துறையினர், உள்ளே செல்வதற்கு அனுமதி மறுத்துள்ளனர். இதுகுறித்து அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பிய போது, குடும்ப உறுப்பினர்கள் தவிர்த்து வேறு யாரும் மருத்துவமனை வர வேண்டாம் என மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு வந்த சில நிமிடங்களிலேயே புறப்பட்டார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரிக்க திமுக உறுப்பினர்கள் யாரும் வர வேண்டாம் என்று காவல்துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை வளாகம் முன் கூட்டம் கூடுவதையோ, முதல்வரை சந்திக்கவோ யாரும் வர வேண்டாம் எனவும், சில நாட்களில் வீடு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications