உஷார்..! வெளிநாட்டு வேலை.. 3 லட்சம் சம்பளம்.. "நம்பி போயிடாதீங்க".. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை!
சென்னை : சுற்றுலா விசாவில் 6 மாதம் வேலை செய்ய, வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பேசி வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு.
வெளிநாடுகளில் அதிக ஊதியத்தில் வேலை தருகிறோம் என்று அழைத்தால் அந்த நிறுவனத்தின் உண்மைத் தன்மை அறியாமல், யாரும் வெளிநாடு செல்ல வேண்டாம் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அயல் நாட்டில் வேலை என்று அழைத்துச் சென்று இணையதள மோசடி பணியைக் கொடுக்கிறார்கள். இது ஆபத்தானது. இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும் என சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலம்..தயார் நிலையில் இருங்கள்..காவல்துறையினருக்கு உத்தரவிட்ட டிஜிபி சைலேந்திரபாபு
உங்கள் நம்பரை பயன்படுத்தி
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள வீடியோவில், "3 லட்சம், 4 லட்சம் சம்பளம் தருகிறோம் என இளைஞர்களை வேலைக்கு அழைத்துச் சென்று மோசடி செயலிகள், மோசடி லோன் ஆப், க்ரிப்டோ கரன்சி மோசடி ஆகிய வேலைகளில் ஈடுபடுத்துவார்கள். உங்கள் மொபைல் நம்பர், இமெயில் ஐடியை பயன்படுத்தி உங்களை குற்றங்களை செய்ய வைத்து நீங்கள் திரும்பி வர முடியாதபடி செய்து வருகிறார்கள். உங்கள் திறமையை மீறிய சம்பளத்தோடு வெளிநாடுகளில் வேலை தருவதாகச் சொன்னால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏஜெண்ட்
மேலும் இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருச்சியைச் சேர்ந்த கேர் கன்சல்டன்சி என்ற நிறுவனம் தாய்லாந்து நாட்டில் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைக்கு ஆள்கள் தேவைப்படுவதாக சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த நிறுவன முகவர்களை தொடர்பு கொண்டு வேலை கேட்ட 18 பேரிடம், தலா ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை வசூலித்துள்ளனர். பின்னர் 18 பேரையும் சுற்றுலா விசாவில் துபாய் வழியாக பாங்காக்குக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சமூக விரோதச் செயல்
அங்கிருந்து சட்டவிரோதமாக மியான்மர் நாட்டுக்கு அவர்களை கடத்திச் சென்று, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், எடுக்கப்பட்ட நடவடிக்கையால் மியான்மர் நாட்டில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிந்து, கேர் கன்சல்டன்சி நிறுவனத்தைச் சேர்ந்த முகவர்கள் ஹானவாஸ், முபாரக் அலி ஆகிய இருவர் கடந்த 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழக இளைஞர்களை குறிவைத்து
இதேபோல, மற்றொரு கும்பல், கம்போடியா நாட்டுக்கு சிலரை வேலைக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுத்தியுள்ளது. இவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அழைத்து வரப்பட்டுள்ளனர். தமிழக இளைஞர்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த மோசடி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
டூரிஸ்ட் விசாவில் போக வேண்டாம்
வெளிநாடுகளில் அதிக ஊதியத்தில் வேலை தருகிறோம் என்று அழைத்தால் அந்த நிறுவனத்தின் உண்மைத் தன்மை அறியாமல், யாரும் வெளிநாடு செல்ல வேண்டாம். மேலும், சுற்றுலா பயண விசாவில் 6 மாதம் வேலை செய்ய, வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம். இதுபோன்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்தும், சந்தேகத்துக்குரிய முகவர்கள் குறித்தும் தமிழக காவல்துறையில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவில் 044-28447701 என்ற தொலைபேசி எண்ணில் பேசலாம். உரிய விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.