காதலி தற்கொலை! மனைவி கொலை! 3 குழந்தைகளுடன் கணவன் மாயம்! நடந்தது என்ன?
சென்னை: சென்னையை அடுத்த பூந்தமல்லியில் மனைவியை தாலி கயிற்றால் இறுக்கி கணவர் கொன்ற வழக்கில் தலைமறைவாகியுள்ள கணவர் குறித்து திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூந்தமல்லி கிழக்கு மாட வீதி, ஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (30). வேன் டிரைவர். இவரது மனைவி நந்தினி (27), இவர்களுக்கு 1 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இவர்களது சொந்த ஊர் பண்ருட்டியை அடுத்த நத்தம் கிராமம் ஆகும். கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் இவர்கள் பூந்தமல்லிக்கு குடிபெயர்ந்தனர். இவர்கள் தங்கியுள்ள வீட்டின் கீழ் பகுதியில் (கிரவுண்ட் ஃபுளோர்) நந்தினியின் சகோதரி பவித்ரா என்பவர் குடியிருந்து வருகிறார்.

ஆனந்தராஜ் வீட்டில்
இந்த நிலையில் ஆனந்தராஜின் வீட்டிலிருந்து நேற்று நீண்ட நேரமாக யாரும் வெளியே வரவில்லை. நேற்று முன் தினம் நந்தினியையும் அவரது 3 குழந்தைகளையும் பவித்ரா பார்த்துள்ளார். இதையடுத்து பதறியடித்துக் கொண்டு நந்தினியின் போர்ஷனுக்கு போன பவித்ரா கதவை தட்டி பார்த்துள்ளார். கதவு திறக்கப்படவில்லை.

கதவை உடைத்து
இதனால் மேலும் அச்சமடைந்த பவித்ரா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது நந்தினி தாலி கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பவித்ரா உடனே பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குழந்தைகளுடன் ஆனந்தராஜ்
ஆனால் வீட்டில் ஆனந்தராஜும் குழந்தைகளும் காணவில்லை. இந்த நிலையில் விசாரணையில் போலீஸாருக்கு திடுக் தகவல்கள் கிடைத்தன. நந்தினி கொலை செய்யப்பட்டவுடன் ஆனந்தராஜையும் அவரது குழந்தைகளையும் காணவில்லை. இதனால் அவர்களது சொந்த ஊருக்கு சென்றிருப்பார் என கருதி பண்ருட்டியில் உள்ள நத்தம் கிராமத்திற்கு சென்று போலீஸார் விசாரித்தனர்.

போலீஸார்
அப்போதுதான் ஆனந்தராஜை ஏற்கெனவே வேறு ஒரு வழக்கில் அந்த சரக போலீஸார் தேடி வருவது தெரியவந்தது. நந்தினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆனந்தராஜ் மீண்டும் வேறு ஒரு பெண்ணை காதலித்ததாக தெரிகிறது. அவருடன் நெருக்கமாகவும் இருந்துள்ளார். அதனால் ஆனந்தராஜுக்கு பிரச்சினை ஏற்பட்டு அந்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த வழக்கில்தான் ஆனந்தராஜை கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை போலீஸார் தேடி வருகிறார்கள்.

போலீஸார் தேடல்
இந்த வழக்கில் ஆனந்தராஜின் அம்மாவை புதுப்பேட்டை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சிக்காமல் இருக்கத்தான் ஆனந்தராஜ் திடீரென பூந்தமல்லிக்கு குடிபெயர்ந்துள்ளதும் தெரியவந்தது. எனவே ஆனந்தராஜை போலீஸார் தேடி வருகிறார்கள். அவர் கிடைத்தவுடன்தான் நந்தினி ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications