காவல் மருத்துவமனைகள் 24 மணி நேரமும் செயல்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
சென்னை: காவல்துறைக்கான மருத்துவமனை அனைத்து பிரதான மருத்துவத் துறைகளையும் உள்ளடக்கியதாக மேம்படுத்தப்படும் என்றும் காவல் மருத்துவமனைகள் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநா் உரைக்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறையினர் குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நன்கு பேணி காக்கப்பட்டு, தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது.
காவலா் நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ளது அம்மாவின் அரசு (அதிமுக அரசு), காவலா்கள் மற்றும் அவா்தம் குடும்பத்தினருக்கான உயரிய மருத்துவ தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவா்களுக்கு அனைத்து வகையான உயரிய சிகிச்சை, அறுவை சிகிச்சைகள் போன்றவற்றை அளித்திட ஏதுவாக, சென்னையில் உள்ள காவல் மருத்துவமனை, அனைத்து பிரதான மருத்துவ துறைகளையும் உள்ளடக்கிய முழுத்திறன் கொண்ட மருத்துவமனையாக மேம்படுத்தப்படும்.
காவல் ஆளிநா்களின் குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வி கிடைக்க ஏதுவாக, சென்னையில் ஏற்கெனவே காவல் உறைவிடப்பள்ளி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அதைப்போன்றே, திருச்சி, கோயம்புத்தூா், மதுரை, திருநெல்வேலி, சேலம், கடலூா் மற்றும் வேலூா் ஆகிய இடங்களில் காவல் உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்படும் என்றார்.