போலீஸ் ஸ்டிக்கரை பைக், காரில் ஒட்டி இருக்கீங்களா? அப்போ உங்களுக்குதான் இந்த எச்சரிக்கை! உஷார்
சென்னை: தனிப்பட்ட இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
போலீஸ் என்கிற ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு விதிகளை மீறுவது, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது போன்ற சம்பவம் சமீப நாட்களாக அதிகரித்துள்ளன. அதேபோல போலீஸ் எனும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வரும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் சோதனை செய்ய தயக்கப்படுகின்றனர். இப்படி இருக்கையில், தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் அதிரடி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் படி உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தேசவிரோதிகள், குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு 'போலீஸ்' ஸ்டிக்கரை தவறாகப் பயன்படுத்துவதால் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்திருப்பதாகவும், இதன் மூலம் குற்ற செயல்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் இருப்பதை அனைத்து பிரிவு அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அதேபோல இது தொடர்பான விதி மீறல்கள் தீவிரமானதாக பார்க்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு இதுபோன்ற அறிவிப்பை அப்போதைய டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டிருந்தார். அதாவது, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதி ஒரு வழக்கில் சில உத்தரவுகளை பிறப்பித்தது. 'காவல் துறை உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களின் கண்ணாடிகளிலும் கருப்பு ஃபிலிம் ஒட்டக் கூடாது. காவலர்கள் தங்கள் தனிப்பட்ட வாகனத்தில் 'போலீஸ்' என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை பயன்படுத்தக் கூடாது' என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, காவல் துறையின் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு தனிப்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications