வெற்றி மேல் வெற்றி தான்! ஓபிஎஸ் யார்க்கர்களை சிக்சர்களாக்கும் இபிஎஸ்! இனி ஒரே ஒரு வழி தான் இருக்கு!
சென்னை : அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரிய வழக்கு, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட வழக்கு, அலுவலக சாவி வழக்கு என ஓபிஎஸ் தொடரும் அனைத்து மேல் முறையீடு வழக்குகளும் இபிஎஸ்க்கு சாதகமாகவே அமைந்து வரும் நிலையில், அவருக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
அதிமுகவின் ஒற்றை தலைமையான முன்னாள் முதல்வர் மற்றும் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு இரு அணிகளாகப் பிரிந்து இருந்த ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சசிகலாவுக்கு எதிராக ஒன்றாக இணைந்தனர்.
ஆட்சிக்குத் தேவையான எம்எல்ஏக்கள் ஆதரவு அப்போது ஓ.பன்னீர் செல்வத்துக்கு இருந்த நிலையில் துணை முதல்வர் பதவி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை கொடுத்திருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுகவில் மோதல்
இதனால் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் 4 ஆண்டு காலம் ஆட்சியை நடத்தியதோடு கட்சியிலும் தனது செல்வாக்கை வெகுவாக வளர்த்துக் கொண்டார். அதன் முடிவு அதிமுக பொது குழு கூட்டத்தில் வெளிப்படையாக தெரிந்தது. கொங்கு மண்டலத்தில் மட்டுமே இருந்த தனது செல்வாக்கை படிப்படியாக வடக்கு மேற்கு கிழக்கு என தமிழகம் முழுவதும் விரிவுபடுத்திய எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்கும் அளவுக்கு வளர்ந்து வந்திருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் இல்லை என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
ஓபிஎஸ்க்கு பின்னடைவு
அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரிய வழக்கு, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட வழக்கு மற்றும் ஓபிஎஸ் தொடரும் அனைத்து மேல் முறையீடு வழக்குகளும் இபிஎஸ்க்கு சாதகமாகவே அமைந்து வருவதை பார்க்க முடிகிறது. ஓபிஎஸ் பொதுக்குழுவை நாடாமல் அனைத்திற்கும் நீதிமன்றத்தை நாடுவது சரி அல்ல என்றும், உயர்நீதிமன்றம் கூறி இருக்கும் நிலையில், சட்ட போராட்டங்கள் ஓபிஎஸ்க்கு கை கொடுக்குமா என்ற சந்தேகத்தை அரசியல் விமர்சகர்கள் முன் வைத்து வருகின்றனர்.
சில வாய்ப்புகள்
கட்சியில் தனக்கான செல்வாக்கை வளர்த்துக் கொள்வது, தனியாக கட்சி தொடங்குவது, ஏதாவது ஒரு கட்சியின் இணைவது என பல வாய்ப்புகள் இருந்தாலும், அதிமுகவில் நீண்ட காலமாக இருக்கும் அவர் வேறு கட்சியில் சேர்வது அவ்வளவு நன்றாக இருக்காது. எனவே அடுத்து வரும் பொதுச்செயலாளர் தேர்தலில் அவரே எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக முன்மொழிந்தால் அதிமுகவும் வலுப்பெறும், வரும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக அமையும்.
திமுக, பாஜக
இன்னும் தனக்குத் தான் அதிகாரம் வேண்டும் என ஓபிஎஸ் முரண்டு பிடித்தால் அது வருகின்ற தேர்தல்களில் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கும் சாதகமாகவும், அதிமுக எனும் நீண்ட நாட்கள் தமிழகத்தில் இருந்த அதிமுக எனும் கட்சிக்கு மாபெரும் பாதகமாகவும் அமையும் எனக் கூறும் அதிமுகவை நீண்ட காலமாக கவனித்து வரும் மூத்த அரசியல் நிபுணர் ஒருவர், கட்சியில் யார் பெரியவர் என்ற அகந்தை, அதிகார மோதல்களை கைவிட்டு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதே மீண்டும் ஆட்சிக்கும் வருவதற்கோ அல்லது பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயல்படுவதற்கோ வாய்ப்பாக அமையும் என்கின்றனர்.