நாங்களே நொந்து நூடூல்ஸாகி கிடக்கிறோம்.. திருச்சியோ, மதுரையோ.. இப்போ ரொம்ப முக்கியமா.. வாசகர்கள் நச்
மதுரையை 2வது தலைநகராக அறிவிக்கலாமா என்பது குறித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டது
சென்னை: "கிடக்கிறது கிடக்கட்டும் கிழவனை தூக்கி மனையில் வை" என்று ஒரு பழமொழி கிராமப்புறங்களில் சொல்வார்கள்.. அப்படி தமிழகத்தில் நாலாபக்கமும் பிரச்சனைகள் நெருக்கி தள்ளி கொண்டிருக்கும்போது, திடீரென 2-வது தலைநகரம் பற்றின பேச்சு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரமாக திருச்சியை மாற்ற வேண்டும் என்ற விருப்பத்தை எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது வெளியிட்டார்.. ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் சரியாக இல்லை என்று பின்னர் அது கிடப்பில் போடப்பட்டது.. திருச்சியை தலைநகராக கொண்டுவந்தால், சென்னையின் நெரிசலுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்றும் சென்னையின் குடிநீர்ப் பற்றாக்குறை அடியோடு குறையும் என்றும் இத்திட்டத்திற்கு காரணமாக அப்போது சொல்லப்பட்டது.

திருச்சி
மேலும் திருச்சி தமிழகத்தின் மையத்தில் உள்ள பகுதியாகும்.. எனவேதான் அப்படி யோசிக்கப்பட்டது. அதற்கான திட்டத்தினை வழிவகுத்தும், அரசியல் சூழ்நிலையால் அது நிறைவேற்றப்பட முடியவில்லை. அவருக்கு பிறகு இதுபோன்ற திட்டத்தை யாரும், யோசிக்கவும், முன் வைக்கவும் இல்லை... இந்த நிலையில் இப்போது மதுரையை 2வது தலைநகராக அறிவிக்கலாம் என்ற கோரிக்கை மெல்ல எழுந்து வருகிறது.

மாநிலங்கள்
இதற்கு சொல்லப்படும் காரணங்கள் என்னவென்றால், இதுபோன்று ஏற்கனவே சில மாநிலங்களில் நடைமுறை உள்ளது.. குஜராத்தில், ஆமதாபாத், காந்திநகரில் அரசு அலுவலகங்கள் உள்ளன... ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமையவுள்ளன. வெளிநாடுகளில்கூட 2 தலைநகரங்கள் இருக்கின்றன.. அந்த வரிசையில், 2வது தலைநகராக மதுரையை அறிவித்தால், தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

மதுரை
மீனாட்சி அம்மன் குடிகொண்டுள்ள பழம் பெருமை மிக்க நகரங்களில், முதன்மையானது மதுரை... தமிழின் தலைநகரம்.. மக்களின் பொருளாதார வசதி மேம்படும். மதுரையில் ஹைகோர்ட் கிளை, ஏர்போர்ட், எய்ம்ஸ் ஆஸ்பத்திரி, தலைநகருக்கான இடவசதி, இப்படி சகலமும் உள்ளன... தென் மாவட்டங்களிலும் சென்னையை போன்று வளர்ச்சி ஏற்பட்டால், தமிழகத்தில் முழு வளர்ச்சியை எட்டும் என்று பெரும்பாலானோர் கருதுகிறார்கள்.

வாசகர்கள்
அதனால் மதுரையை 2வது தலைநகராக்க அரசுக்கு கோரிக்கைகளும் விடப்பட்டு வருகின்றன.. இந்த நிலையில், இப்படி ஒரு அறிவிப்பு குறித்து நம் வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நினைக்க விரும்பினோம்.. அதற்காக கருத்து கணிப்பு மாதிரி ஒரு கேள்வியையும் கேட்டோம்.. அதில், "மதுரையை தமிழகத்தின் 2வது தலைநகராக அறிவிக்கலாமா?" என்பதுதான் கேள்வி.

ஆப்ஷன்கள்
அதற்கு "அறிவிக்கலாம்" என்ற ஆப்ஷனுக்கு 29.08 சதவீதம் பேரும், "திருச்சியை தலைநகராக்கலாம்" என்பதற்கு 28.8 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். "கோவைக்கு என்ன குறைச்சல்" என்ற ஆப்ஷனுக்கு 9.41 சதவிதமும், "எதுக்கு 2-வது தலைநகரம்" என்ற ஆப்ஷனுக்கு 31.71 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

மதுரை, திருச்சி
இந்த வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை, 2வது தலைநகரம் என்பதற்கும், திருச்சி, கோவையை அறிவிக்கலாம் என்பதற்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் மக்களின் கருத்து உள்ளது.. மதுரையும், திருச்சியும் ஒருசேர வாக்குகளை பெற்றுள்ளதால், இதற்கான வலுவான காரணங்களையும், பின்னணிகளையும் ஆராய்ந்து அதை அரசு பரிசீலித்து, அதன்பிறகு 2வது தலைநகரை அறிவிப்பதே சிறந்தது. கோவையை பலர் சொல்ல காரணம், பெரும்பாலான தொழிற்சாலைகள் கோவையை சுற்றி உள்ளதுதான்.

தேவையா?
ஆனால், இதில் ஹைலைட்டே எதுக்கு 2-வது தலைநகரம் என்பதே மக்களின் பெருவாரியான மனநிலையாக உள்ளது.. அந்த அளவுக்கு அவர்கள் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி நொந்து நூடூல்ஸாகிக் கிடக்கின்றனர். கொரோனா கொடுமை, டாஸ்மாக் திறப்பு, இ-பாஸ் விவகாரத்துக்கு நடுவில், இந்த 2வது தலைநகரம் தேவையா என்பதைதான் இந்த "31.71 சதவீத" அழுத்தமான வாக்குகள் புரிய வைக்கின்றன!












Click it and Unblock the Notifications