மதுரையில் 12-ம்தேதி பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?
சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
அதனைத் தொடர்ந்து நிதி ஒதுக்கப்பட்டு, கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற 12-ம் தேதி விருதுநகரில் நடைபெறும் விழாவில் 11 மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

'மோடி பொங்கல்' விழா
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. இந்த விழாவை தொடர்ந்து தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி பாஜக சார்பில் ஜனவரி 12-ம் தேதி 'மோடி பொங்கல்' விழா மதுரையில்நடைபெறவுள்ளதாகவும் தமிழக பாஜக ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது.

பாஜகவினர் ஏற்பாடு
10 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் பொங்கல் வைப்பதற்கும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் பாஜகவினர் ஏற்பாடு செய்து வந்தனர். மதுரை பொங்கல் விழாவில் பங்கேற்கும் மோடி, தமிழில் சில நிமிடங்கள் பேச இருப்பதாகவும், அதற்காக அவர் பயிற்சி எடுத்து வருவதாகவும் பாஜகவினர் தரப்பில் கூறப்பட்டு வந்தது.

திடீரென நிகழ்ச்சி ஒத்திவைப்பு
இந்த நிலையில் மதுரையில் ஜனவரி 12-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் தமிழகத்தில் கொரோனா, ஓமிக்ரான் காரணமாக பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக கூறினார்கள்.

அரசு விழாவும் ஒத்திவைப்பா?
அப்போது 11 மருத்துவக் கல்லூரிகள் விழாவும் ஒத்திவைக்கப்படுகிறதா? என்று அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த அவர், '' 11 மருத்துவக் கல்லூரிகள் தொடர்பான விழா என்பது தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாவாகும். அந்த விழாவை ஒத்திவைக்கப்படுவது குறித்து தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications