ஒற்றை தலைமையும் வேண்டாம்.. சசிகலாவும் வேண்டாம்.. முன்னாள் அமைச்சர் பொன்னையன் தடாலடி
சென்னை: சசிகலாவை ஒருபோதும் அதிமுகவிற்குள் அனுமதிக்கமாட்டோம் என அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சேலத்தில் அதிமுகவின் மூத்த உறுப்பினரும், கழக அமைப்புச் செயலாளருமான, முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் சசிகலாவை ஒருபோதும் அதிமுகவிற்குள் அனுமதிக்க மாட்டோம்.
அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட சசிகலா கிடையாது. ஜெயலலிதா இருக்கும்போதே சசிகலாவையும், அவருடைய குடும்பத்தையும் வீட்டிலிருந்தே ஒதுக்கி வைத்திருந்ததாக தெரிவித்தார்.
நான் ஓய மாட்டேன்.. நிலைமை மாறப்போகிறது.. அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா அதிரடி அறிக்கை
உட்கட்சி தேர்தல்
மேலும் அதிமுகவின் உட்கட்சி தேர்தல் சட்ட விதிகளின் படி நடைபெறும். எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர் செல்வமும் அதிமுகவின் இரு கண்களாக உள்ளனர். திமுகவில் இருந்து அன்வர்ராஜா நீக்கப்பட்டது சரியான முடிவு என்றும், அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.
முன்னாள் அமைச்சர்கள்
எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றிபெறும். முன்னாள் அமைச்சர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாது. சாலையில் செல்லும் பலர் அதிமுக கொடியை பயன்படுத்துவது போலத்தான் சசிகலாவும் பயன்படுத்துகிறார் என சாடினார்.
வேறு கருத்துகள்
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து கட்சியில் இரு வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இதில் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள், ஆதரவாளர்கள் சசிகலா வேண்டும் என்கிறார்கள். மற்ற நிர்வாகிகள் சசிகலா அதிமுகவுக்குள் வரக் கூடாது என்கிறார்கள். ஆனால் சசிகலாவோ அதிமுகவை கைப்பற்றும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
பொதுச் செயலாளர்
அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற லெட்டர் பேடை பயன்படுத்துகிறார். அதிமுக கொடி கட்டிய காரில் வலம் வருகிறார். இதனால் சசிகலா மீது சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடத்துவதாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.