ஒரு தாய் இப்படித்தான் பேசுவாரா.. ஜாமீன் கேட்ட நடிகை ரஞ்சனா நாச்சியாருக்கு குட்டு வைத்த நீதிபதி
சென்னை: ஒரு தாய் இப்படித்தான் பேசுவாரா என பூந்தமல்லி நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பி, நடிகை ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமீனை வழங்கினார்.
குன்றத்தூர் டூ போரூர் வழித்தடத்தில் நேற்று முன் தினம் ஒரு அரசு பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அதில் மாணவர்கள் தொங்கிக் கொண்டு சென்றனர். இதை பின்னால் காரில் சென்ற பாஜக நிர்வாகியும் நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் தனது செல்போனில் படம் எடுத்தார்.

அப்போது ஒரு பள்ளி மாணவன் புட் போர்ட் அடித்தபடியே பேருந்தின் மீது ஏற முயன்றான். உடனே பதறிய ரஞ்சனா நாச்சியார், நேராக சிக்னலில் அந்த பேருந்தை பிடித்து வழிமறித்தார். அங்கு டிரைவரிடம் இப்படி தொங்கிக் கொண்டு செல்கிறார்கள். ஒருத்தன் மேலே ஏறுறான். இதெல்லாம் நீங்கள் கண்டிக்க மாட்டீர்களா என கேட்டார்.
அதற்கு டிரைவர் எவ்வளவோ சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறார்கள் என்றார். அதற்கு ரஞ்சனா நீங்கள் செருப்பால் அடித்திருக்க வேண்டாமா என கேட்டபடியே பேருந்தின் முன்வாசலுக்கு சென்று அங்கு படியில் நின்ற மாணவர்களை இறக்கினார். பிறகு பின்வாசலுக்குச் சென்றார். அங்கும் அவர் மாணவர்களை இறக்கிவிட்டார். அப்போது சில மாணவர்கள் வர மறுத்த போது சரமாரியாக அடித்தார்.
அதிலும் பேருந்தின் மேலே ஏறிய மாணவனை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த அவர் அவனை வெளியே இழுத்தார், சரமாரியாக அடித்து நாயே, அறிவில்லையா என்றெல்லாம் கேட்டார். பிறகு அங்கிருந்த கண்டக்டரை ஏன்டா நீ என்னா கவர்மென்ட் வேலை பார்க்குற! பசங்க தொங்கிகிட்டு வராங்க, நீ பாட்டுக்கு டிக்கெட் கிழிச்சி கொடுத்துகிட்டு இருக்கே! உனக்கு புள்ளக் குட்டிங்க இல்லையா, நாயே, வாடா போடா, அறிவில்லையா என்றபடியே கேட்டார்.
இது தொடர்பாக வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்திற்கு ரஞ்சனாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் என கலவையாக கருத்துகள் வெளியாகின. இப்படி தட்டிக் கேட்டால்தான் பசங்க தவறு செய்ய மாட்டார்கள் என்கிறார்கள். இன்னும் சிலரோ அடுத்த வீட்டு குழந்தைகளை அடிக்க இவருக்கு யார் உரிமை கொடுத்தது, அதிலும் மாணவர்களை கண்டித்து இறக்கிவிட்டதும் விடாமல் அவர்களை நாயே என்று பேசியதும் பள்ளி அடையாளங்களை வீடியோவுக்காக காட்டியதும் அந்த குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும் என்கிறார்கள்.
இந்த நிலையில் போக்குவரத்து ஊழியர் சரவணன் புகாரின் பேரில் ரஞ்சனா நாச்சியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று மாங்காடு போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து ரஞ்சனா, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது வழக்கறிஞர், ரஞ்சனா அந்த மாணவர்களிடம் தாயை போல் நடந்து கொண்டார்.
அவர்களை தனது குழந்தைகளாக பார்த்துதான் அதிக உரிமை எடுத்துக் கொண்டார் என்றார். இதையடுத்து நீதிபதியிடம் சம்பவ வீடியோவை போலீஸார் காட்டியபோது, நீதிபதி, ஒரு தாய் இப்படித்தான் பேசுவாரா என கேள்வி எழுப்பி ரஞ்சனாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.












Click it and Unblock the Notifications