சென்னை ஐஐடி மாதிரியே.. பிற கல்லூரிகளிலும் கொரோனா பரவ வாய்ப்பு- ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
சென்னை: மெட்ராஸ் ஐஐடி போலவே பிற கல்லூரிகளிலும் கொரோனா நோய் பரவல் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் தற்போது 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி உள்ளனர். இந்நிலையில் ஒரே நாளில் 32 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 60 மாணவர்கள் உட்பட 71 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 33 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் ஐஐடி வளாகத்தில் கட்டுபாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மறுஅறிவிப்பு வரும் வரை அனைத்து துறை மையங்கள், நூலகம் மற்றும் உணவகங்கள் ஆகியவை மூடப்படுகின்றன.

வீட்டிலிருந்து வேலை
பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், ஊழியர்கள் வீட்டிலிருந்தே இணையவழியில் பணியை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்படும் என்று ஐஐடி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அஜாக்கிரதை
இந்த நிலையில், சென்னை ஐஐடியை தொடர்ந்து பிற கல்லூரிகளிலும் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ராதாகிருஷ்ணன், அஜாக்கிரதையாக இருப்போருக்கு இது ஒரு பாடம் என்று குறிப்பிட்டார்.

கவனக்குறைவாக இருக்காதீர்கள்
ஐஐடியில், பொதுவான உணவகம் இருந்தது. இப்போது அதை மூடிவிட்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கிறது. ஆனால் கவனக்குறைவாக இருந்தால் ஐஐடி போலவே பிற கல்லூரிகளிலும் நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

நேரில் ஆய்வு
மாணவர்கள் கூட்டம் போடக்கூடாது. ஐஐடி நமக்கு ஒரு பாடம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், சென்னை ஐஐடியில் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.












Click it and Unblock the Notifications