ஜனாதிபதி கோத்தபாய பதவி விலக வேண்டும் - பிரதமர் ரணிலிடம் வலியுறுத்தும் போராட்டக்குழுவினர்
இலங்கையில் மக்கள் போராட்டத்தின் பிரதிநிதிகள் 8 கோரிக்கைகள் அடங்கிய பிரகடனத்தை இன்று புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் அளித்துள்ளனர்.
சென்னை: ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே பதவி விலக வேண்டும்.... தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொத்துக்கள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 கோரிக்கைகள் அடங்கிய மனுவை மக்கள் போராட்டத்தின் பிரதிநிதிகள் இன்று புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் அளித்துள்ளனர். மக்களின் கோரிக்கைகளை புதிய பிரதமர் நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசியலில் அங்கம் வகிக்கும் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களின் கூடாரங்களைக் கிழித்தெறிந்து தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்கள் மீது போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இது பெரும் கலவரமாக மாறியது.
மகிந்த ராஜபக்சே பதவி விலகியுள்ளார். இருப்பினும் பல இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. சில இடங்களில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த வன்முறை சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
கோத்தபாய ராஜபக்ச பதவி விலக மறுத்து வருகிறார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் புதிய பிரதமலை சந்தித்த மக்கள் போராட்ட பிரதிநிதிகள் இன்று அளித்த கோரிக்கை மனு விபரம்:
1. ஜனாதிபதி பதவி விலக வேண்டும்.
2. அதிகபட்சம் 15 அமைச்சர்களைக் கொண்ட இடைக்கால அரசு ஒன்று 18 மாதங்களுக்கு ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
3. அரசியலமைப்பில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு, 20 ஆம் திருத்தம் நீக்கப்படுவதுடன் 21 ஆம் திருத்தம் புதிதாக கொண்டுவரப்பட வேண்டும்.
4. பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்கும் வகையில் ஒரு நிவாரண வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும், அதில் விளிம்பு நிலையிலுள்ள மக்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும்.
5. தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொத்துக்கள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
6. நிதி ரீதியிலும், வேறு வகையிலும் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பில் வெளிப்படையான கண்காணிப்பு இருக்க வேண்டும்.
7. இலங்கை வாழ் பிரஜைகளின் அடிப்படை உரிமையான உயிர் வாழ்வதற்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்.
8. சுதந்திரமான, நீதியான தேர்தல்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.