சென்னை உயர் நீதிமன்றத்திற்கு.. 4 புதிய நீதிபதிகள் நியமனம்.. குடியரசுத் தலைவர் உத்தரவு
சென்னை: கொலீஜியம் அமைப்பு அளித்த பரிந்துரையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம், மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.
அதன் அடிப்படையில் பல்வேறு நீதிபதிகளும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட குஜராத் உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பணி புரிந்து வந்த நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்யாய், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தச் சூழலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் அமைப்பு அளித்த பரிந்துரையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கறிஞர்கள் சுந்தரம் ஸ்ரீமதி, பரத சக்ரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷபிக் ஆகியோரை நீதிபதிகளாக நியமனம் செய்ய கொலீஜியம் அமைப்பு பரிந்துரை அளித்திருந்தது. அதை ஏற்றுக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அதிகபட்சமாக உயர்நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 75 ஆகும். தற்போது நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகளின் எண்ணிக்கையும் சேர்ந்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது.
சீமானுக்கு வேல்முருகன் அட்வைஸ்: ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலைக்கு உபத்திரம் செய்யாதீங்க!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என். வி. ரமணா நீதிமன்றங்களில் தேங்கி இருக்கும் வழக்குகள் குறித்துத் தொடர்ந்து கவலை எழுப்பி வருகிறார். இந்த நிலையைச் சரி செய்யவே புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வரும் நாட்களில் மேலும் சில நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.