சிக்கனில் இருந்து மீனுக்கு மாறிய அசைவபிரியர்கள்... மீன்கள் விலை கிடுகிடு உயர்வு
சென்னை: கொரோனோ வைரஸ் பீதியால் தமிழகத்தில் கோழிக்கறி விற்பனை அடியோடு சரிந்துள்ள நிலையில், மட்டன் மற்றும் மீன்களை விரும்பி வாங்கிச்செல்கின்றனர் அசைவபிரியர்கள்.
மட்டன் ஒரு கிலோ விலை ரூ.650 முதல் ரூ.750 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், மீன்களின் விலை கடந்த வாரத்தை 25 % வரை சென்னையில் உயர்ந்துள்ளது.
சிக்கன் மூலம் கொரோனோ வைரஸ் தாக்கக்கூடும் என்ற வதந்தியால் தமிழகமட்டுமன்றி தேசிய அளவில் கோழிக்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் வதந்தி
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளன. சிக்கன் மூலம் கொரோனோ வைரஸ் தொற்றிக்கொள்ளும் என கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப்களில் வதந்திகள் உலா வருகின்றன. இதனால் சிக்கன் கடை பக்கம் தலைகாட்டுவதை தவிர்த்த அசைவபிரியர்கள் விலை சற்று கூடுதலாக இருந்தாலும் மட்டன் மற்றும் மீன்களை நாடத் தொடங்கியுள்ளனர்.
விளக்கம்
கடந்த 15 நாட்களுக்கு முன்பு வரை மீன்களின் விலை ஓரளவு கட்டுக்குள் இருந்தது. காரணம் மீன்களின் பார்மலின் கலக்கப்படுவதாக செய்திகள் வெளியானதால் மீன்கள் வாங்குவதை பொதுமக்கள் தவிர்த்தனர். ஆனால் மீனவர்களும், மீன் வியாபாரிகளும் பார்மலின் புகார்களை அடியோடு மறுத்து உரிய விளக்கம் கொடுத்தனர். மேலும், சட்டமன்றத்தில் மீன்களை அச்சப்படாமல் வாங்கலாம், எங்கும் பார்மலின் கலக்கப்படுவதில்லை என அமைச்சர் ஜெயக்குமார் சர்டிபிகேட் கொடுத்தார். இதையடுத்து ஓரளவு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டதை அடுத்து மீன்களை வாங்கத் தொடங்கினர்.
25 % வரை உயர்வு
இந்நிலையில் கடந்த வாரம் கிலோ ஒன்று ரூ.600 க்கு விற்பனையான வஞ்சிரம் மீன் இன்று ரூ.800 முதல் ரூ.900 வரை விற்பனை செய்யப்படது. இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் வெள்ளிக்கிழமை வரை கிலோ ரூ.150க்கு விற்பனையான மடவாய் மீன் இன்று ரூ.250 வரை விலை போனது. இறாலை பொறுத்தவரை ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்றும் , இன்றும் ரூ.550 வரை விற்பனை செய்யப்பட்டது. மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்த நிலையிலும் மீன் கடைகளில் அசைவப்பிரியர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அச்சமின்றி
இதேபோல் மட்டன் வாங்குவதிலும் அசைவ பிரியர்கள் மிகுந்த ஆர்வம்காட்டுகின்றனர். காரணம் சிக்கன், மீன்களை காட்டிலும் மட்டன் விவகாரத்தில் இதுவரை எந்த ஒரு எதிர்மறை தகவலும் வெளியானதில்லை. மட்டன் கிலோ ஒன்று கிராமப்புறங்களில் ரூ.600-க்கும் நகரங்களை பொறுத்தவரை ரூ.650 முதல் ரூ.800 வரையிலும் கூட விற்பனை செய்யப்படுகிறது. அதிலும், வெள்ளாட்டு கறிக்கு தனி விலையும், செம்மறி ஆடு கறிக்கு தனி விலையும் நிர்ணயிக்கப்படுகிறது.