கருணாநிதியின் நம்பிக்கை நட்சத்திரம்.. பிரபல வழக்கறிஞர் என்.நடராஜன் காலமானார்.. மு.க.ஸ்டாலின் அஞ்சலி!
சென்னை: பிரபல வழக்கறிஞர் என்.நடராஜன் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. மறைந்த என்.நடராஜன் தண்டனைச் சட்டம், அரசியல் சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களிலும் நிபுணராக விளங்கியவர்.
தனது வாத திறமையால் புகழ் பெற்ற அவர் கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை சட்ட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவராவார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வழக்கறிஞராக, நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய அவர் பல வழக்குகளில் வாதாடி வெற்றி கண்டவர்.

மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சி.பி.ஐ. தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேரின் மரண தண்டனையை தனது திறமையான வாதத்தால் ஆயுள் தண்டனையாக குறைத்தவர் என்.நடராஜன். கீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

கருணாநிதியின் நம்பிக்கை நட்சத்திரம்
மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:- மூத்த வழக்கறிஞரும், கருணாநிதின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்தவருமான என்.நடராஜன் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சிக்கும் மிகுந்த துயரத்திற்கும் உள்ளானேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினேன்.

தனி முத்திரை பதித்தவர்
இந்திய தண்டனைச் சட்டம், இந்திய அரசியல் சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களிலும் நிபுணராக விளங்கிய நடராஜன் அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழக்கறிஞராக பல வழக்குகளில் வாதாடி வெற்றி கண்டவர். கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை தனது வாத திறமையால் சட்ட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து நீங்காப் புகழ் பெற்றவர்.

நேர்மை அறிவுக்கூர்மை
நீதித்துறைக்கு மட்டுமின்றி, கழகத்திற்கும் அனுபவமிக்க சட்ட நுணுக்கங்கள் தெரிந்த பல வழக்கறிஞர்களை உருவாக்கித் தந்த பெருமைக்குரிய அவர், நீதியரசர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு வாதாடிய அவர், வழக்கறிஞர் தொழிலுக்கான நேர்மை அறிவுக்கூர்மை, நம்பிக்கை என அனைத்தையும் தன்னகத்தே கொண்டவர்.

நீதித்துறைக்கு பேரிழப்பு
சட்ட நிபுணத்துவம் நிறைந்த சட்ட அனுபவத்தின் இமயமாக விளங்கிய நடராஜனின் மறைவு நீதித்துறைக்கும் கழகத்திற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நீதித்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பழ.நெடுமாறன் இரங்கல்
26 தமிழர்கள் உயிர்க் காப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்,
'முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ்காந்தியின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பெற்ற 26 தமிழர்களுக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடி 19பேர் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்படுவதற்கும், மீதமுள்ள 7பேர் இன்று உயிருடன் இருப்பதற்கும் காரணமான மூத்த வழக்கறிஞர் என். நடராசன் அவர்கள் காலமான செய்தி ஆழ்ந்த துயரத்தைத் தருகிறது. இராசீவ் கொலை வழக்கு தடாச் சட்டத்தின் கீழ் போடப்பட்டதே செல்லத்தக்கதல்ல என்பதை உச்சநீதிமன்றத்தில் தனது வாதத் திறமையால் நிலை நிறுத்திய பெருமைக்குரியவர் மூத்த வழக்கறிஞர் என். நடராசன் ஆவார். அவரின் மறைவு நீதித் துறைக்கும், தமிழர்களுக்கும் பேரிழப்பாகும். அவரின் துணைவியாருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications