கீழ்த்தரமாக பேசும் சீமானே! பகிரங்க மன்னிப்பு கேள்-சென்னையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் போராட்டம்!
சென்னை: பெண்களை பொதுவெளியில் கீழ்த்தரமாக பேசி வரும் சீமான் தமிழக பெண்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் வடசென்னை மாவட்ட குழு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் குழந்தைகள், பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதை தடுக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொதுவெளியில் கீழ்த்தரமாக பேசி வரும் சீமான் தமிழக பெண்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் வடசென்னை மாவட்ட குழு சார்பில் செயலாளர் செண்பகம் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளிகளில் ஆசிரியர்களால் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு வருவது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 2012ல் அரசாணை 121 வெளியிடப்பட்டது. அதன்படி பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை கட்டாய ஓய்வு (அ) பணிநீக்கம் செய்ய வேண்டும். மேலும் ஆசிரியர்களுக்கான உளவியல் ஆலோசனைகள், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை செய்வதையும் அந்த அரசாணை உள்ளடக்கியுள்ளது. அந்த அரசாணையின் கீழ் இதுவரை என்ன விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை குறித்து தமிழக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்.
தமிழகத்தில் எங்கெங்கு பாலியல் புகார் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதையும், அமைக்காத நிறுவனங்கள் மற்றும் ஆலை முதலாளிகள் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் அரசு அறிக்கை அளிக்க வேண்டும்.
மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தலைவரை தமிழக அரசு உடனடியாக நியமித்திட வேண்டும்.
போக்ஸோ உள்ளிட்ட குழந்தைகளுக்கான சட்டங்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் பாடத் திட்டங்களில் இணைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணின் அடையாளத்தை வெளியிடுவது சட்டப்படியான குற்றம் என்றுள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்ணின் எல்லா விவரங்களையும் உள்ளடக்கிய FIR வெளிவந்தது என்பது, பெண்கள் புகார் அளிப்பதை தடுக்கும் நோக்கிலானது என்பதில் சந்தேகமில்லை. தொழிற் நுட்ப கோளாறு, அதற்கான காரணம் ஒன்றிய அரசு என்ற தமிழக அரசின் வாதங்கள் ஏற்கத்தக்கதல்ல. பெண்களின் பாதுகாப்பிற்கான சட்டங்களை முறையாக அமல்படுத்தி பாதுகாப்பது அரசின் கடமை என்பது வலியுறுத்தப்பட்டது.
பெண்களை பொது வெளியில் கீழ்த்தரமாக பேசி வரும் சீமான் தமிழக பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி NFIW தலைவர்கள் உரையாற்றினர்.

பெண்களை கீழ்த்தரமாக பேசுவது மட்டுமல்ல. இன்றைக்கு 'பாலியல் வன்புணர்வு' (rape) என்பதற்கு உள்ள சட்ட வரையறை பல ஆண்டுகளாக பெண்கள் போராடி பெற்ற ஒன்று. திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பாலியல் உறவு கொள்வதும் பாலியல் வன்முறையில் அடங்கும்.
ஆனால் சீமானோ ஒரு பெண்ணை கடத்தி சென்று வன்புணர்ச்சி செய்தால் மட்டுமே வன்புணர்ச்சி(rape ) என்பதாக சட்ட வரையறையை திருத்தி, கொச்சையாக பேசி சட்ட அவமதிப்பு செய்து வருகிறார். இதை நீதிமன்றங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், சீமானின் பெண்களுக்கு எதிரான கேவலமான பேச்சை கண்டித்து அறிக்கை வெளியிட்ட மாதர் சம்மேளன தலைவர்களை போனில் மிரட்டும் விதத்தில் நாம் தமிழர் கட்சியினர் பேசி வருகின்றனர். இந்த மிரட்டல்களுக்கு அஞ்சுபவர்கள் அல்ல மாதர் சங்கத்தினர் என்பதோடு சீமானின் இனவாத அரசியலுக்கு எதிரானவர்கள் என்பதையும் மாதர் சங்கத் தலைவர்கள் விளக்கி பேசி சீமானுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications