"நீட் தேர்வு விலக்கு கிடைக்கும் வரை.. நீட் தேர்வுக்கான பயிற்சி தொடரும்" - அன்பில் மகேஷ் உறுதி!
சென்னை: நீட் தேர்வு விலக்கு கிடைக்கும் வரை நீட் தேர்வுக்கான பயிற்சியை வழங்குவது அரசின் கடமை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலையில் தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், அறக்கட்டளை மற்றும் தமிழக அரசு சார்பாக மாணவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டியது எங்களின் கடமை. அதேபோல் மாணவர்களும் இந்த வயதில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

நீட் தேர்வு பயிற்சி
தொடர்ந்து நீட் தேர்வு பயிற்சி தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, நீட் தேர்வு பயிற்சியை பொறுத்தவரை, சிறந்த தொழிற்நுட்பம் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு விலக்கு பொறுத்தவரை அனைத்து கட்சியின் ஆதரவோடும் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது கிடைக்கும் வரை நீட் தேர்வுக்கான பயிற்சியை வழங்குவது அரசின் கடமை. அது நிச்சயம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

தற்காலிக ஆசிரியர்கள் ஊதியம்
தொடர்ந்து மழலையர் பள்ளிகளுக்கான ஆசிரியர் ஊதியம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தமிழகத்தில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதற்காக தான் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதேபோல் வரும் நாட்களில் நிதியமைச்சருடனான ஆலோசனை கூட்டம் உள்ளது. அதில் ஆசிரியர்களின் ஊதியம் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

போதைப்பொருள் விழிப்புணர்வு
பின்னர் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, போதைப்பொருட்கள் இல்லாத பள்ளி வளாகங்களாக பள்ளிகள் மாற வேண்டும். மாணவர்களிடையே போதை பொருள் பழக்கத்தை ஒழிப்பது நமது கடமை ஆகும். அதற்காக கொண்டு வரப்பட்டுள்ள சிற்பி திட்டம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இதனை விரிவுபடுத்த வேண்டிய கட்டத்தை நோக்கி பயணிக்கிறோம். காவல்துறை உள்ளிட்ட துறைகள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தொழிற்கல்வி
பின்னர் அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது என்பது பொய்ப்பிரச்சாரம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications