"சொந்த கட்சி தலைமையையே கண்டிக்கிறாரே".. அண்ணாமலை போராட்டம்.. பிடிஆர் அடித்த பரபர கமெண்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பாஜக நாளை போராட்டம் நடத்த உள்ளது. இந்த போராட்டம் குறித்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த தீபாவளி அன்று பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. பெட்ரோல் மீதான கலால் வரி ரூ 5, டீசல் மீதான கலால் வரி ரூ 10 குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மற்ற மாநில அரசுகளும் மாநில வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
போராட்டத்தில் உயிரிழந்த.. 750 விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி - தெலங்கானா அரசு
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பல்வேறு பாஜக கட்சி ஆளும் மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல் விலையில் வாட் வரியை குறைத்தது. அசாம், திரிபுரா, கர்நாடகா மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளன. ஆனால் தமிழ்நாடு அரசு ஏற்கனவே பெட்ரோல் வரியில் 3 ரூபாய் குறைத்துவிட்டதால் இதில் கூடுதலாக வரியை குறைக்கவில்லை.
பதிலடி
இந்த வரியை குறைக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மீதான மாநில வரியை மேலும் குறைக்க முடியாது என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் 2014ல் இருந்து தொடர்ந்து உயர்த்தியது . அவர்கள்தான் இதன் மீதான வரியை குறைக்க வேண்டும்.
விளக்கம்
தமிழ்நாட்டில் 2.63 கோடி இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயனடையும் வகையில், நமது நாட்டிற்கே முன்னோடியாக பெட்ரோல் மீதான மாநில வரியை லிட்டர் ஒன்றிற்கு 3 ரூபாய் குறைத்து அறிவித்தோம். இதனால், ஆண்டு ஒன்றிற்கு மாநில அரசிற்கு ரூ.1,160 கோடி இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டது. கடந்த அரசு விட்டுச்சென்ற நிதி நெருக்கடிச் சூழலிலும் இதனை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இப்படி இருக்கும் போது மாநில அரசை மேலும் வரி குறைக்க சொல்வது சாத்தியமற்றது என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
பாஜக போராட்டம்
தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பாஜக நாளை போராட்டம் நடத்த உள்ளது. தமிழ்நாடு முழுக்க பாஜக போராட்டம் நடத்தும் என அதன் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மாநில அரசு பெட்ரோல், டீசல் விலை மீதான வரியைக் குறைக்கவில்லை. இதை குறைக்க வேண்டும்.
பாஜக மாநில அரசுகள்
பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் குறைக்கப்பட்டுள்ளது. அங்கெல்லாம் மாநில வரி குறைப்பால் மக்கள் பலன் அடைந்துள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் மாநில வரி குறைக்கப்படவில்லை. எனவே உடனே தமிழ்நாட்டில் அரசு மாநில வரிசையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாஜக சார்பாக இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
பதில்
இந்த நிலையில் பாஜகவின் இந்த போராட்டத்திற்கு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார். என்னது, விலை உயர்வை கண்டித்து போராட்டமா? ஆனால், அதற்கு முழு காரணம் வரி உயர்வு தானே? அதுவும், அனைத்து வரி உயர்வையும் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சி அதிமுகவும் தானே செய்தன அப்போது,ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் சொந்தக் கட்சியின் தேசியத் தலைமையையும், கூட்டாளிகளையும் கண்டிக்குறாரோ?, என்று பிடிஆர் கேள்வி எழுப்பி உள்ளார்.