கள்ளக்கடத்தலுக்கு ஜெயிலுக்கு போனவர் இல்லை சாவர்க்கர்! சுதந்திர போராட்ட தியாகி! சொல்கிறார் தமிழிசை
சென்னை: சாலை வியாபாரிகளுக்கான விழா ஒன்றில் கலந்து கொண்ட புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை, சாவர்க்கர் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
பிரிட்டிஷ்காரர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று இந்த ஆண்டு உடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை கோலாகலமாகக் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் இந்தியா முழுவதும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சில முக்கிய அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பிரதம மந்திரியின் ஸ்வாநிதி மகோத்சவ் என்ற பெயரில் சாலை வியாபாரிகளுக்கான திருவிழா புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் நடைபெற்றது. இன்று தொடங்கி மொத்தம் மூன்று நாட்களுக்கு இந்த விழா நடைபெறும் நிலையில், தொடக்க நாளான இன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.

சாவர்க்கர்
இதில் பாரம்பரிய உணவு வகைகள், மண்பாண்ட மற்றும் கைவினை பொருட்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் உள்ளன. இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட வீரரான சாவர்க்கர் குறித்து சிலர் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி உள்ளனர். மேலும், அவர்கள் போராட்டத்தையும் அறிவித்து உள்ளனர்.

அந்தமான் போய் பாருங்கள்
போராட்டம் நடத்துவது என்றால் நடத்துங்கள்.. ஆனால், அவரது வரலாற்றைத் தெரிந்து கொண்டு போராட்டம் நடத்துங்கள்.. அந்தமானுக்குச் சென்று முதலில் அவரது வரலாற்றைத் தெரிந்து கொள்ளுங்கள். சாவர்க்கர் ஒன்றும் கள்ளக் கடத்தல் செய்து சிறையில் இருந்தவர் இல்லை. அவர் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். அவர் மீது சிலருக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

வரலாற்று ஆவணங்கள்
எனக்கும் கூடத் தான் சில தலைவர்கள் மீது கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. ஆனால், அவர்கள் விடுதலைக்காகப் பாடுபட்டவர்கள். அதனால் கருத்து வேறுபாடுகளை மறந்து, நாட்டின் விடுதலைக்காக அவர்கள் செய்த நல்லதை மட்டுமே நான் எடுத்துக் கொண்டேன். சாவர்க்கர் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட ஒரு வீரர். இதை நான் மட்டும் சொல்லவில்லை. வரலாற்று ஆவணங்களையும் பார்த்தாலே இது நமக்குத் தெரியும்.

செஸ் ஒலிம்பியாட்
நாம் இங்கு அனைத்தையுமே அரசியல் ஆக்க தேவையில்லை. சிலர் போராட்டத்தை அறிவித்து உள்ளனர். அது அவர்கள் இஷ்டம். இதற்கெல்லாம் கவலைப்படும் ஆள் நான் இல்லை. சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது. இதனை மத்திய மற்றும் மாநில அரசுள் இணைந்து நடத்துவது எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்" என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி வேண்டுகோள்
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைவரது வீடுகளிலும் வரும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக் கொடி ஏற்ற வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். சூரியன் அஸ்தமித்த முன்னரே, தேசியக் கொடியை இறக்க வேண்டும் என்ற விதி இருந்த நிலையில், அதிலும் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications