புஷ்பவனம் குப்புசாமியா இது? அர்ஜுன் சம்பத் வீடியோ - சனாதன இந்து தர்ம நிகழ்ச்சிக்கு மனைவியோடு அழைப்பு
சென்னை: பிரபல திரைப்பட பின்னணி பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி தம்பதியினர் இந்து மக்கள் கட்சி நடத்தும் சனாதன இந்து தர்ம நிகழ்ச்சியில் மக்கள் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள்.
அர்ஜுன் சம்பத் தலைமையிலான இந்து மக்கள் கட்சி வரும் ஜனவரி 29 ஆம் தேதி கடலூரில் சனாதன இந்து தர்ம எழுச்சி என்ற பெயரில் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு பேரணி, மாநாடு, பொதுக்கூட்டம் ஆகியவை நடத்தப்பட இருக்கின்றன. இதில் இந்து மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சாமியார்கள் என பலர் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
புஷ்பவனம் குப்புசாமியின்.. ரூபாய் 1 லட்ச மதிப்பிலான மொபைல் அபேஸ்! பல்லாவரம் சந்தையில் கைவரிசை
இந்து மக்கள் கட்சி
இதற்கான விளம்பர பணிகளை தற்போது இந்து மக்கள் கட்சி தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் சமூக வலைதளங்களில் இதற்கான பணிகளை அந்த கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சினிமா, சமூக வலைதள பிரபலங்களை கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்க வைக்கும் பணிகளில் அக்கட்சியினர் ஈடுபட்டு உள்ளனர்.
புஷ்பவனம் குப்புசாமி தம்பதி
அந்த வகையில் பிரபல சினிமா மற்றும் நாட்டுப்புற பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி தம்பதி இந்து மக்கள் கட்சியின் சனாதன இந்து தர்ம எழுச்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். இதனை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.
விழாவுக்கு அழைப்பு
அதில் பேசிய புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி இருவரும் "வணக்கம், 2023 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி கடலூரில் சனாதன இந்து தர்ம மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் என்னென்ன நடைபெற இருக்கிறது என்றால், தொலைந்துபோன, தொலைந்து வருகின்ற நம்முடைய பண்பாட்டு, கலாச்சாரங்களை மீட்டெடுக்கும் விதமாக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
திசைமாறி செல்லும் கலாச்சாரம்
எப்படியெல்லாம் மீட்டு எடுக்கலாம்? எப்படியெல்லாம் நம்முடைய பண்பாடு கலாச்சாரங்கள் திசைமாறி சென்றுகொண்டு இருக்கிறது? இது நம்முடைய அடையாளம். இதை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இதை மீட்டு எடுக்க வேண்டும். இது தொடர்பாக சொற்பொழிகள் நடைபெற உள்ளன. பேச்சரங்கம் நடைபெறுகிறது.
தர்மமே நிலைக்கும்
இசை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. அதில் நாம் பாடுகிறோம். நம்முடைய இசை நிகழ்ச்சியும் இருக்கிறது." என்று கூறிய அவர்கள், அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும் இருக்கும் வித்தியாசத்தை பாடிகாட்டினர். இதன் பின்னர் பேசிய அவர்கள், "இந்த மாடர்ன் எல்லாம் நிலைத்து நிற்காது. தர்மம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவைதான் நிலைத்து நிற்பவை.
திருந்த வேண்டும்
இதற்கு உதாரணமாக சமீபத்தில் வந்த கொரோனா நிறைய பேருக்கு நிறைய விசயங்களை உணர்த்திவிட்டது. இன்னும் திருந்தவில்லை என்றால், சீக்கிரம் திருந்த வேண்டும். அதுதான் நன்றாக இருக்கும். நம்முடைய பண்பாட்டை பற்றி நமக்கு தெரிகிறதோ இல்லையோ, வெளிநாட்டினருக்கு நன்றாகவே தெரிந்து உள்ளது.
நம் அடையாளம் என்ன?
அவர்கள், நம்முடைய கலாச்சாரத்தை பின்பற்ற ஆசைப்படுகிறார்கள். ஆனால், நாம் அவர்களுடைய கலாச்சாரத்துக்கு மாறி வருகிறோம். அவர்களே வேண்டாம் என வெறுத்துப்போய்தான் இங்கு வருகிறார்கள். நாம் அதை பிடித்துக்கொண்டு நிற்கிறோம். இதையெல்லாம் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய அடையாளம் என்ன? நாம் அப்படியென்றால் யார்? இதையெல்லாம் அங்கு பேசுவோம்." என்றனர்.