நீட் விலக்கு மசோதா.. மத்திய அரசின் கேள்விகள் என்ன? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு எழுப்பியுள்ள கேள்விகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
தேசிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தினத்தை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதயவியல் கண்காட்சியை பார்வையிட்டு திறன் ஆய்வகம், உடலியல் மறுவாழ்வு, புனரமைக்கப்பட்ட கருத்தரங்க கூடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி,மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி,மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அமைச்சர் மா.சு. பேச்சு
அப்போது பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் மக்கள் பிரதிநிதிகளுக்கு பூங்கொத்து, சால்வைகள் அணிவித்து கௌரவிப்பது அவசியமற்றது. இது தொடர்பாக சுற்றரிக்கை அனுப்ப மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபுவுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மா.சுப்பிரமணியன் பேட்டி
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில், நீட் தேர்வில் விளக்கு பெறுவது தான் தமிழக அரசின் திட்டம். தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டு முறை சட்ட முன்வடிவு நிறைவேற்றி அனுப்பி உள்ளோம். நீட் விலக்கு மசோதா தொடர்பாக கடந்த ஜூலை 5ஆம் தேதி மத்திய அரசின் குறிப்பு ஆளுநர் மூலம் தமிழக அரசின் சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கேள்விகள்
இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பில் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள குறிப்பில், இந்த மசோதாவை நிறைவேற்ற சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? இது மத்திய அரசு வரம்புக்குள் வருகிறதா? தேசிய மருத்துவ ஆணைய சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கு இது முரண்பட்டு அமைந்துள்ளதா? தேசிய தகுதி நுழைவுத் தேர்வு உள்ளிட்ட வரலாற்று சீர் திருத்தங்கள் உறுதி செய்யும் வகையில் உள்ள நீட் தேர்வுக்கு இந்த மசோதா பாதிப்பை ஏற்படுத்துமா? தேசிய கல்வி கொள்கைக்கு முரணானதா? உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

விரைவில் பதில் அறிக்கை
இந்தக் கேள்விகள் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களால் ஆலோசிக்கப்பட்டு, விரிவான விளக்கம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதேபோல் இன்னும் இரு நாட்களில் முதலமைச்சர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அனுமதி பெற்றவுடன் மத்திய அரசுக்கு பதில் அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications