இன்று 10 லட்சம்.. அன்று ரூ 1 கோடி! பணம் மீது சுத்தமாக ஆசையில்லை! அவர்தான் "தகைசால் தமிழர்" நல்லகண்ணு
சென்னை: அன்று ரூ 1 கோடியை கட்சிக்கே கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர் நல்லகண்ணு, இன்று தமிழக அரசு அறிவித்த ரூ 10 லட்சத்தையும் அரசுக்கே நிதியாக கொடுத்துவிட்டார். பணத்தின் மீது பற்றே இல்லாத இந்த உன்னத தலைவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
Recommended Video
76 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர் நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட்டது.
இந்த தகைசால் விருதுடன் ரூ 10 லட்சத்திற்கான காசோலை அவரிடம் வழங்கப்பட்டது. இந்த காசோலையை பெற்றுக் கொண்ட ஆர் நல்லகண்ணு அந்த தொகையுடன் தான் தயாராக வைத்திருந்த ரூ 5 ஆயிரத்திற்கான காசோலையையும் சேர்த்து மொத்தம் ரூ 10 லட்சத்து 5 ஆயிரத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

பாராட்டுச் சான்றிதழ்
வெறும் பாராட்டுச் சான்றிதழை மட்டும் பெற்று சென்றார் நல்லகண்ணு. பணத்தின் மீது துளி கூட ஆசையே இல்லாத நல்லகண்ணுவின் இந்த பெருந்தன்மையை தமிழகமே பாராட்டி வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு கட்சி சார்பில் கிடைத்த ரூ 1 கோடி நிதியை கூட தனது சொந்த கட்சிக்கே திருப்பி அளித்த வள்ளல் நல்லகண்ணு.

80ஆவது பிறந்தநாள்
ஆம்! அவரது 80 ஆவது பிறந்தநாளுக்கு ரூ 1 கோடி கட்சி சார்பில் நிதி திரட்டப்பட்டு அவரிடம் வழங்கப்பட்டது. அதாவது கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இந்த சம்பவம்! உடனே நல்லகண்ணு அந்த 1 கோடி ரூபாயில் நயா பைசாவை கூட எடுத்துக் கொள்ளாமல் கட்சி நலனுக்காகவே திருப்பி கொடுத்துவிட்டார். "அந்த கோடி ரூபாயை வைத்துக் கொண்டு நான் என்ன செய்ய போகிறேன்?" என்று யதார்த்தமாக கேள்வியை கேட்டு, பணத்தை திருப்பி தந்துவிட்டார்.

கார்
ஒரு கோடியைதான் திருப்பி கொடுத்துவிட்டார், சரி காராவது அவருக்கு வாங்கித் தரலாமே என நினைத்து கட்சியினர் கார் வாங்கினர். இதை கேள்விப்பட்ட நல்லகண்ணு என்ன செய்தார் தெரியுமா, உடனே கட்சி அலுவலகத்திற்கு சென்று தனக்கு கார் வேண்டாம், அதை கட்சிக்கே வைத்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டார். தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு லட்சம் ரூபாயையும் வழங்கியது. அந்த தொகையில் பாதியை கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்திற்கும் கொடுத்துவிட்டார்.

போராட்டம்
இது மட்டுமல்ல திருநெல்வேலியில் 1999ஆம் ஆண்டுகளில் தென் மாவட்டங்களில் ஒரு ஜாதிக்காரர் கொல்லப்பட்டால் எதிர் ஜாதிக்காரர் ஒருவர் கொல்லப்படுவது தொடர் கதையாகி வந்தது. இதனால் சாதி ஒழிப்பு போராட்டம் நடத்திய போது தனது மாமனார் அன்னச்சாமி வெட்டி கொல்லப்பட்ட போது மிகவும் பொறுமை காத்த நல்லகண்ணு, தனது மாமனார் மரணத்திற்கு இழப்பீடாக கிடைத்த பணத்தை கலவரத்தால் பாதிக்கப்பட்ட இரு சமூகத்தை சேர்ந்த குழந்தைகளின் கல்வி உதவிக்காக கொடுத்துவிட்டார்.

இலவசமாக தங்குவதற்கு வீடு
சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் ஒதுக்கி தரப்படும். அந்த வகையில், நல்லகண்ணுவுக்கும் வீடு ஒதுக்கி தரப்பட்டது. இங்கு இலவசமாக தங்கி கொள்ளலாம் என்றாலும், அப்படி இலவசமாக தங்குவது கட்சி கொள்கைக்கு எதிரானது என்று கூறி, அந்த வீட்டுக்கு மாதா மாதம் வாடகை தந்து வந்தார் நல்லகண்ணு. எங்காவது வெளியிடங்களுக்கு பொதுக்கூட்டம் என்றால், கட்சி சார்பிலேயே, அந்தந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காரில் அழைத்து செல்வார்கள். கட்சியில் முழு நேர ஊழியராக இருந்தால் அலவன்ஸ் தருவது வழக்கம்.. அந்தவகையில், 2,500 ரூபாயை மட்டுமே நல்லக்கண்ணு பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.

எள் முனை அளவு
பணத்தின் மீது எள் முனை அளவும் பற்றில்லாத இந்த பத்தரை மாற்று தங்கத்திற்கு எதிரிகளே இல்லை. அரசியல்வாதிகளிலேயே தனது எளிமையான தோற்றத்தால் அனைவராலும் நேசிக்கப்படுபவர் இவரது நிழல் கூட நேர்மையானது என்றே சொல்லாம். இவரது வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications