மழை பாதிப்பு நிவாரணம்... முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பு, நிவாரண நிதி உள்ளிட்ட விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது, வெள்ள சேதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. திருவள்ளூர், சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரைக்கும் எங்கும் கொட்டித்தீர்த்த பெருமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. விதைத்த பயிர்கள் வீடு வந்து சேராமல் அழுகிப்போவது கண்டு விவசாயிகள் கண்ணீரில் தத்தளிக்கின்றனர்.
காவிரி, தென்பெண்ணை, பாலாறு, தாமிரபரணி ஆறு தமிழகத்தில் பாயும் அத்தனை ஆறுகளும் பொங்கி பிரவாகம் எடுத்து ஆக்ரோஷமாக பாய்கின்றன. பாலத்தை தாண்டி பாய்ந்த ஆறுகள் கரைகளை மீறி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மக்கள் வீடுகளை விட்டு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து இன்று காலை 30 ஆயிரம் கன அடி நீர் உபரிநீர் திறந்து விடப்பட்டதால் கொசஸ்தலை ஆறு வழியாக வரக்கூடிய உபரிநீர் மணலி புதுநகரில் உள்ள மணலி சடயங்குப்பம் பகுதிக்குட்பட்ட வடிவுடை அம்மன் நகர், ஜெனிபர் நகர், மகாலட்சுமி நகர் போன்ற பல்வேறு பகுதிகளில் சூழ்ந்துள்ளது.
பாலாறு பாயும் பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் பாயும் வெள்ளத்தால் கடலூர் நகரமே வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அனைத்து அமைச்சர்களும் நேரில் சென்று ஆய்வு செய்து, அங்குள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மற்றும் மழைநீரை வெளியேற்ற துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனிடையே மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிவாரணம், பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், புதிய தொழில் தொடங்குவது உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.
இந்த அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications