தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்கள்?
சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி தொடங்கியது.
பருவமழை சற்று தாமதமாக தொடங்கினாலும் ஆரம்பம் முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது. கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை கொட்டியது.
கனமழை: விருதுநகர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. தேனியில் பள்ளிகளுக்கு விடுமுறை
தென் மாவட்டங்களில்
டெல்டா மாவட்டங்களை பொருத்தவரை நல்ல மழை பெய்திருந்தது. மயிலாடுதுறையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது. சென்னையிலும் கனமழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு கடந்த ஒருவாரத்திற்கு மேலாக மழையின் தீவிரம் சற்று குறைந்தது. இதனால் கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் பெரிய அளவில் எங்கும் மழை பெய்யவில்லை.
மதுரை, விருதுநகர், தேனி
ஆங்காங்கே சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்து வந்தது. நேற்று, மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் கனமழை வெளுத்து வாங்கியது. மதுரையில் நேற்று பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததது. வறண்ட வானிலையே நிலவிய நிலையில், இரவில் திடீரென்று கனமழை கொட்டியது. இதனால், மழையால் எதிர்பார்க்காமல் சென்ற மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அடுத்த 3 மணி நேரத்தில்
இரவு 8 மணியளவில் பெய்த மழை அரைமணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. கனமழையால் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அதேபோல், தேனி ,விருதுநகர் மாவட்டத்திலும் நேற்று இரவு மழை பெய்தது. இந்த நிலையில், தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
9 மாவட்டங்களில்
தமிழகத்தின் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, ஈரோடு 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. நேற்று இரவு முதலே தேனி, மதுரை பகுதிகளில் மழை பெய்தது. விட்டு விட்டு இரவு வரை மழை தொடர்ந்து பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
விருதுநகர், தென்காசியில் மழை
ஒருசில இடங்களில் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளுக்கும் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர். தொடர்ந்து இரவு வரை மழை பெய்தது. இதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மாலை முதலே மழை பெய்தது. சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலும் ஆங்காங்கே சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்தது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இதனிடையே, கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதேபோல் தேனி மாவட்டத்திலும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.