27 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா
தமிழ்நாட்டில் ஓரிரு மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. விடிய விடிய தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவை பிறப்பித்துள்ளன. சென்னை,திருவள்ளூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேற்கு திசையில் நகர்ந்து, தென் கிழக்கு அரபிக்கடல் நோக்கி செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல மாவட்டங்களில் மிக கனமழையும், கனமழையும் பெய்து வருகிறது.
கனமழை காரணமாக தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, விழுப்புரம், ராணிப்பேட்டை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருச்சி, வேலூர், திருவாரூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை - சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
இதனிடையே தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் ஏற்கெனவே பள்ளிகளுக்கு நேற்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதுச்சேரி, காரைக்கால் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வருகிற நவம்பர் 5,6 ஆகிய இரு தினங்களுக்கும் அரசு விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.