பார்த்துட்டே இரு மச்சி.. தேர்தல் தள்ளி போகும்.. "தலைவரும் வருவாரு"..ரஜினி ரசிகர்களின் உலகமே தனிதான்
சென்னை: அரசியலுக்கு வரப்போவதில்லை என ரஜினிகாந்த் அறிவித்துவிட்டாலும் அவர் நிச்சயம் வருவார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அது எப்படி சாத்தியம் என்பதற்கும் அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி வருகிறார்கள்.
எம்ஜிஆர்- சிவாஜி, ரஜினிகாந்த்- கமல், விஜய், அஜித்- இப்படி செட் செட்டாக பெயர் பெற்ற நடிகர்களுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கும். இவர்களது படங்கள் ரிலீசானால் ரசிகர்களிடையே வசூலில் ஆரம்பிக்கும் சண்டை அப்படியே எத்தனை நாட்கள் ஓடுகிறது என்பது வரை இருக்கும்.
ரஜினி ரசிகர்களும் கமல் ரசிகர்களும் அவ்வப்போது மோதிக் கொள்வார்கள். அது போல் விஜய், அஜித் ரசிகர்களும் அவ்வப்போது மோதிக் கொள்வார்கள். தற்போது சமூகவலைதளங்கள் வந்துவிட்டதால் கேட்கவே வேண்டாம்.
நட்சத்திரங்கள்
ரசிகர்கள்தான் இப்படி. ஆனால் இந்த நட்சத்திரங்கள் நண்பர்கள்தான். ரஜினி எல்லா விழாக்களிலும் கமலை பாராட்டி பேசுவார். கமல் கட்சி தொடங்கிவிட்டதும் ரஜினி கட்சி தொடங்கவில்லையே என அவரது ரசிகர்கள் மன வேதனைப்பட்டனர். இந்த நிலையில் வரும் டிசம்பர் 3-ஆம் தேதி ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்தவுடன் ரசிகர்கள் அனைவரும் கெத்தாக இருந்தார்கள்.
அரசியலுக்கு வரபோவதில்லை
ஆனால் அரசியலுக்கே வரப்போவதில்லை என ரஜினி தெரிவித்தவுடன் அவர்களின் மனம் வேதனை அடைந்தது. தற்போது ரசிகர்களின் நண்பர்கள், மற்ற நடிகர்களின் ரசிகர்கள் என ரஜினியை கலாய்ப்பதை அவர்களால் பார்க்க முடியவில்லை. ஒரு சில ரசிகர்களே ரஜினியை திட்டுகிறார்கள். இன்னும் சிலர் ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு நாம் கொடுத்து வச்சது அவ்ளோதான் என விட்டுவிட்டார்கள்.
ரஜினி அறிவிப்பு
ஆனால் டை ஹார்ட் பேன்ஸ் என சொல்லும் சிலரோ, ரஜினியின் முடிவை ஏற்க மறுத்து போராட்டம் நடத்துகிறார்கள். இப்படியிருக்க ரசிகர்கள் இன்னமும் ரஜினியை நம்புகிறார்கள். அவர் நிச்சயம் வருவார் என்கிறார்கள். அது சும்மா ஆழம் பார்க்க ரஜினி அறிவித்ததாம், இந்த கொரோனா நிச்சயம் முடிவடைந்துவிடும்.
வர்லாம் வா தலைவா
சிறுநீரகத்தை பாதிக்காத அளவுக்கு கொரோனாவுக்கு ஒரு தடுப்பூசியை கண்டுபிடிப்பார்கள். கொரோனாவின் உருமாறிய தன்மையால் தமிழகத்தில் தேர்தல் தள்ளி போகும். அதற்குள் தடுப்பு மருந்து போடும் பணிகள் முடிவடைந்துவிடும். பின்னர் தலைவருக்கு எந்த சிக்கலும் இல்லை. வர்லாம் வா வர்லாம் வா தலைவா என சொல்கிறார்கள்.