"ஏமாற்றம்".. மேம்போக்காக பேசிவிட்டு.. கப்-சிப் என ஒதுங்கிய ரஜினி.. போட்ட பிளான் எல்லாம் அப்ப காலியா?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இதுவரை எந்த கட்சிக்கும் ஆதரவாக "வாய்ஸ்" கொடுக்கவில்லை... இனியும் கொடுப்பாரா என்பது சந்தேகம்தான்!
2021ம் வருடத்திற்கான 51-வது தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு மத்திய அரசு மூலம் தாதா சாகேப் விருது வழங்கப்பட்டு வருகிறது. சினிமா துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிகப்பெரிய விருது ஆகும் இது .
இந்த உயரிய விருது ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்டது பெரிய அளவில் கேள்விகளை எழுப்பியது. தேர்தல் நேரத்தில் இப்படி உயரிய விருது அளிப்பது அரசியல் ரீதியாக நிறைய சந்தேகங்களை எழுப்பியது.
சந்தேகம்
தமிழக அரசியலுக்குள் ரஜினிகாந்தை கொண்டு வர பாஜக கடுமையாக முயன்று வந்தது. ரஜினி தலைமையில் கூட்டணியை உருவாக்கி திமுகவை எதிர்க்கலாம் என்று பாஜக கடைசி வரை திட்டம்போட்டது. ரஜினிகாந்தும் தொடக்கத்தில் அரசியலுக்கு வருவதாக சிக்னல் கொடுத்துவிட்டு கடைசியில் உடல் நலனை காரணம் காட்டி அரசியலுக்கு வராமலே விலகிவிட்டார்.
பாஜக
ரஜினியை நம்பி திட்டங்களை வகுத்து வந்த பாஜகவிற்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. தமிழகத்தில் எப்படியாவது ரஜினியை வைத்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று நினைத்த பாஜகவிற்கு ரஜினியின் முடிவு பெரிய இடியாக இருந்தது. ரஜினி அரசியலுக்கு வராத நிலையில், குறைந்தது அவர் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்ப்பு
தேர்தல் நேரத்தில் பாஜகவிற்கு ஆதரவாக சவுண்ட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினியோ கடைசி வரை எதுவும் பேசாமல் அமைதி காத்தார். இந்த நிலையில்தான் ரஜினிக்கு மத்திய அரசு தாதாசாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்தது. இது ரஜினியின் திரை சேவைக்கு கிடைத்த விருது என்றாலும், ரஜினியின் சப்போர்ட்டை பெறுவதற்காக பாஜக இந்த ''மூவை'' செய்து இருக்கலாம் என்றும் கேள்விகள் எழுந்தது.
கேள்வி
ரஜினியின் வாய்சை பெற்று விடலாம் என்று நம்பி இந்த விருதை வழங்கி இருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் ரஜினியோ விருது வாங்கிய பின் அதை பற்றி பெரிதாக பேசிகொள்ளவில்லை. அறிக்கை ஒன்றின் மூலம் தனக்கு வாழ்த்து சொன்னவர்களுக்கு எல்லாம் நன்றி தெரிவித்தார். அதோடு இன்னொரு ட்வீட் மூலம் எல்லோருக்கும் நன்றி என்று கூறினார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி கூட ரஜினியை தலைவா என்று கூறி வாழ்த்தினார். ஆனால் ரஜினியோ அதை எல்லாம் பெரிதுபடுத்தாமல், அமைதியாக நன்றி என்று கூறி எண்ட் கார்ட் போட்டுவிட்டார். பெரிதாக விருது பற்றி அலட்டிக்கொள்ளாமல் அமைதியாக நன்றி தெரிவித்துவிட்டு ரஜினி ஒதுங்கிவிட்டார்.
இல்லை
ரஜினியிடம் இருந்து வேறு வாய்ஸ் எதுவும் வரவில்லை. இன்று மாலையோடு தேர்தல் பிரச்சாரம் முடிகிறது. இன்னும் இரண்டு நாளில் தேர்தல் இருக்கிறது. ஆனால் ரஜினியோ இதுவரை எந்த கட்சிக்கும் ஆதரவாக பேசவில்லை.அரசியலே வேண்டாம் என்று ரஜினி ஒதுங்கிவிட்டார்.
நன்றி
தனது அறிக்கையில் கூட அதிமுக , பாஜக, திமுக என்று எல்லோருக்கும் சமமாகவே நன்றி என்று கூறியுள்ளார். மொத்தத்தில் ரஜினி யாருக்கும் இந்த தேர்தலில் இந்த நொடி வரை ஆதரவு தெரிவிக்கவில்லை. இனிமேலும் அவர் குரல் கொடுத்தாலும்.. அது பெரிய அளவில் தேர்தலில் ஆதிக்கம் செலுத்துமா என்பதெல்லாம் சந்தேகம்தான்.. இதனால் ரஜினியை நம்பி சில திட்டங்களை வகுத்த பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது!