"தலைவா... வா...வா' ரஜினிகாந்த் வீடு முன்பு ரசிகர்கள் கண்ணீருடன் தர்ணா
சென்னை: அரசியலுக்கு வரமாட்டேன் எனறு அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் வீடு முன்பு தரையில் அமர்ந்து ரசிகர்கள் கண்ணீருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. "தலைவா... வா...வா என்று கோஷமிட்டு ரசிகர்கள் திடீர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னைப் பற்றிப் பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.
ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும்.
இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
ரஜினி முடிவால் குஷியோ, குஷி... மக்களுடன், மு.க.ஸ்டாலின் எடுத்த அசத்தல் செல்பிய பாருங்க!
இதனால் அதிர்ச்சி அடைந்த ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். பலர் தங்கள் மனக்குமுறலை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். உடல்நிலையை கருத்தில் கொண்டு ரஜினி எடுத்த இந்த முடிவை அரசியல் கட்சிகள் பாராட்டி வருகின்றன. ஆனால் ரசிகர்களோ வேதனை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வீடு முன்பு தரையில் அமர்ந்து ரசிகர்கள் கண்ணீருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். "தலைவா... வா...வா என்று கோஷமிட்டு ரசிகர்கள் திடீர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.