மக்கள் உயிர் காக்க.. 100 பெட் மருத்துவமனை அமைக்கும் "காலா" நடிகை.. "காலா சேட்" எங்கே போனார்?
சென்னை: டெல்லியில் 100 படுக்கை வசதி கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார், காலா திரைப்பட நடிகை ஹியூமா குரேஷி.
அதேநேரம், அண்ணாத்த படப்பிடிப்பில் ரொம்பவே பிஸியாக இருக்கிறார், அதே காலா திரைப்படத்தில் ஹீரோவாக தோன்றிய நடிகர் ரஜினிகாந்த்.
கொரோனா, நோய்த்தொற்று உலகிலேயே மிக மோசமாக தற்போது இந்தியாவைத்தான் புரட்டி எடுத்து வருகிறது.

மோசமான நிலவரம்
மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடையாது, படுக்கைகள் கிடைத்தவர்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காத சூழல், ஒருவேளை சிகிச்சை பெற்று அல்லது சிகிச்சை பெற முடியாமல் வீட்டில் துடிதுடித்து உயிரிழந்தாலோ, உடல்களை அடக்கம் செய்ய, சுடுகாடுகளில் இடம் கிடையாது. எரியூட்ட நேரம் கிடையாது என்ற மிகமோசமான சூழ்நிலையை இந்தியா இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறது.

சிஸ்டம் மாற்றுவது இதுவா
இப்படி ஒரு சூழல் நிலவும் நிலையில்தான் "இந்த நாட்டின் சிஸ்டம் மாற்றப்படவேண்டும்" என்று முழங்கிய ரஜினிகாந்த் ஹைதராபாத் நகரில் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் பவ்யமாக பங்கேற்றுள்ளார். நாடு முழுக்க மரண ஓலங்கள் எதிரொலித்துக் கொண்டிருக்கும் நிலையில், ரஜினிகாந்த் பஞ்ச் டயலாக்குகள் வாயசைத்து கொண்டிருக்கிறார்.

சமூக அக்கறை நடிகர்
வேறு ஒரு நடிகர் இதை செய்தால் கூட மக்களிடம் அது பற்றி பேச்சு இருக்காது. ஆனால் இந்த நாட்டு மக்கள் மீது மிகுந்த அக்கறை இருப்பவரை போல காட்டிக்கொண்டு நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொன்னவர், இந்தியா இதுவரை கண்டிராத மோசமான சூழலில் சிக்கித் தவிக்கும் போது, சிறுத்தை சிவா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பதை சகிக்க முடியாமல் சமூகவலைத்தளங்களில் பொங்குகிறார்கள் மக்கள்.

காலா கதாநாயகி
இன்னொரு பக்கம்.. இதே ரஜினிகாந்துடன் காலா திரைப்படத்தில் நடித்த ஹியூமா குரேஷி,சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 100 படுக்கை வசதி கொண்ட தற்காலிக மருத்துவமனையை டெல்லியில் நிறுவ முயற்சி செய்து கொண்டிருக்கிறார். காலா திரைப்பட நடிகை, மக்களின் உயிர் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, "காலா சேட்" எங்கே போனார் என்று கேட்கிறார்கள் பொதுமக்கள்.

சோனு சூட் கலக்கல்
இவர் மட்டும் கிடையாது.. ரஜினிகாந்த் வாங்கும் சம்பளத்தில் மிகக் கணிசமான தொகையை மட்டுமே பெறும் சோனு சூட், பிரான்சு நாட்டிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் சுவாசிக்க வேண்டும், உயிர் தப்ப வேண்டும், என்று ஒருபக்கம் இவர்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில்தான், ரசிகர்கள் விசில் அடிக்க வேண்டும் என்பதற்காக பார்த்துப் பார்த்து நடித்துக் கொண்டு இருக்கிறார் ரஜினிகாந்த்.

அரசுக்கு நிதி தேவை
தடுப்பூசி போடுவதற்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நாட்டில், முடிந்த அளவிற்கு பணக்காரர்கள் நிதி உதவி செய்தால்தான் எளிய மக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. தடுப்பூசிகள், வெண்டிலேட்டர், ஆக்சிஜன் தயாரிப்பு கட்டமைப்புகள் உள்ளிட்டவற்றை செய்வதற்காக ஏகப்பட்ட நிதி தேவைப்படும் நிலையில், உச்ச நட்சத்திரம், உச்சஸ்தாயியில் சூட்டிங்கில் டயலாக் பேசிக் கொண்டிருக்கிறாரே தவிர, தாராளமாக நிதி கொடுக்கவில்லையே.. அதுபற்றி வாய்திறக்கவில்லையே என்று கேட்கிறார்கள் பொதுமக்கள்.

என்ன செய்கிறார் ரஜினி
"ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு தந்தது தமிழகம்" என்று, பாடலுக்கு வாய் அசைத்த ரஜினிகாந்த், இன்று கொரோனா நோய் தொற்று காரணமாகவும், ஊரடங்கு காரணமாகவும், அடுத்து என்ன நடக்குமோ, வருமானத்திற்கு வழி என்ன என்று வியர்க்க விறுவிறுக்க வீடுகளுக்குள் அதே தமிழக மக்கள் தவித்து கிடக்கும்போது, அது பற்றி வாயே திறக்காமல் வசதியாக இந்த மக்களை மறந்து விட்டது நியாயமா, என்பதே ரஜினிகாந்துக்கு நெட்டிசன்கள் கேள்வி.












Click it and Unblock the Notifications