"ப்ளீஸ்.. என்னை விட்டுடுங்க".. வாய்விட்டு சொன்ன ரஜினி.. விடாமல் விரட்டும் "அன்பு".. இது சரியா..?
ரஜினியின் ஆதரவை ஆதரவாளர்கள் பெற துடித்து கொண்டிருக்கிறார்கள்
சென்னை: ப்ளீஸ்.. என்னை விட்டுடுங்க.. உடம்பு சரியில்லை என்று ரஜினி வாய்விட்டு சொல்லியும்கூட, இன்னமும் அவரது ஆதரவாளர்கள் அரசியலுக்கு இழுக்க முயல்வது சரியா? முடியாதுன்னு சொல்லிட்டுப் போனவரை, விடாமல் தொல்லை செய்யும் இந்த கூட்டம் உணர்த்துவது என்ன?
தேர்தல் வந்தாலே ரஜினி வாய்ஸ், ரஜினியின் ஆதரவு யாருக்கு, எதிர்ப்பு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு விடும்.. அந்த அளவுக்கு ரஜினிக்கான செல்வாக்கு தமிழகத்தில் இருந்து வந்தது...
ரஜினி ரசிகர்களும், அவர் மீது அபரிமிதமான ஆசையையும், அசைக்க முடியாத நம்பிக்கையையும் வைத்திருந்தனர்.
ரஜினி
அன்று, எம்ஜிஆரை திமுகவை விட்டு நீக்கியபோது தமிழகமே மிரண்டது.. எம்ஜிஆருக்காக அவருடைய ரசிகர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள் என அத்தனை பேரும் கொந்தளித்தனர்.. தெருவுக்கு வந்து மூலை முடுக்கெல்லாம் ஆதரவு தந்தனர்.. கிட்டத்தட்ட அதுபோலவே ஒரு கிரேஸ் ரஜினிக்கு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் கண்ணுக்கு எட்டியவரை அப்படி ஒன்றை இதுவரை பார்க்க முடியவில்லை. அவரது ரசிகர்கள் மட்டும்தான் பொங்கினார்களே தவிர பொதுமக்களிடம் எழுச்சி வரவில்லை.
கனவு
பாஜகவும் ரஜினி பின்னாடியே விரட்டி கொண்டிருந்தது.. ரஜினியை வைத்து திராவிட கட்சிகளுக்கு செக் வைக்கவும் பிளான் செய்யப்பட்டு, அந்த பிளான் சுக்குநூறானதுதான் மிச்சம்.. இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது..
அமெரிக்கா
ஒருமுறை அமெரிக்காவுக்கு ரஜினி சென்றிருந்தபோது, அவருக்கு செல்வாக்கு எப்படி இருக்கிறது என்று 234 சட்டசபை தொகுதிகளிலும் உளவுத்துறை தரப்பில் ஒரு சர்வே எடுக்கப்பட்டது.. அதில், கிட்டத்தட்ட 150 தொகுதிகளில், ரஜினிக்கு கணிசமான ஆதரவு இருப்பதும் தெரிய வந்ததாம். அதாவது, தலித் சமுதாய ஓட்டுகள் மட்டும் 15 சதவீதம் கிடைத்திருந்தது.. அதாவது 35 முதல் 40 சதவீத ஓட்டுக்கள், ரஜினி கட்சிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அந்த சர்வேவில் தெரியவந்ததாம்!
பிளஸ்
இதுதான் அதிமுக, திமுக தரப்புக்கு எரிச்சலை தந்ததாகவும் சொல்லப்பட்டது. இதுதான் ரஜினியின் ஆதரவாளர்களுக்கு பெரிய பிளஸ்ஸாகவும் அமைந்திருந்தது. இதை வைத்துக் கொண்டுதான் அவர்கள் விடாமல் ரஜினியை துரத்திக் கொண்டிருந்தனர். அதில் முக்கியமானவர்கள் கராத்தே தியாகராஜன், அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன், எல்லாவற்றிற்கும் மேலாக உயிருக்குயிரான ரசிகர்கள்!
அறிவிப்பு
ஆனால் தன்னால்முடியாது, உடம்பு சரியில்லை, என்னை விட்டு விடுங்கள் என்று சொல்லி விட்டார் ரஜினிகாந்த். வெளிப்படையாக அறிக்கை விட்ட பின்னரும், விடாமல் ரஜினியை துரத்தி கொண்டிருக்கிறார்கள்.. கராத்தே தியாகராஜனை பொறுத்தவரை ரஜினி மீது மிகப்பெரிய மரியாதையை வைத்திருக்ககூடியவர்.. ரஜினிக்காகவே திமுகவை தூக்கி அடிக்கவும் தயாரானவர்.. ரஜினி தன் முடிவை அறிவித்த பின்னரும், "கெஸ்ட் ரோலாச்சும் பண்ணுங்கன்னு" சொல்லும் அளவுக்கு விசுவாசத்தை காட்டியவர்.. இப்போது அவர் நிலைமை பரிதாபமாக உள்ளது.
தமிழருவி மணியன்
ரஜினியின் அரசியல் முடிவால், மண்டையில் இடி விழும் அளவுக்கு ஷாக் ஆகி, வீட்டுக்கு போய்விட்ட தமிழருவி மணியனும், இன்னும் ரஜினி மீதான நம்பிக்கையை வைத்திருக்கிறார்.. வள்ளுவர் கோட்டத்தில் ரசிகர்கள் நடத்திய ஒருநாள் ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழருவி மணியனும் ஒரு கூட்டத்தை நடத்தி, தன்னுடைய அமைப்பை ரஜினி கட்சியுடன் இணைப்பதாக ஒரு பகீரை கிளப்பி... பிறகு அதை மறுத்து.. இப்படி ஒரே நாளில் பரபரப்பை கூட்டிவிட்டார். இதற்கு பிறகுதான் ரஜினி மறுபடியும் ஒரு அறிக்கை வெளியிட்டு, யார் வேண்டுமானாலும் விருப்பமான கட்சியில் இணையலாம் என்று தெரிவித்து மீண்டும் நோஸ்கட் தந்தார்.
ஓபன் அறிக்கை
அப்போதும் இந்த பிரச்சனை அடங்கவில்லை.. இதோ, அர்ஜூன மூர்த்தி ஆரம்பித்துவிட்டார்... ரஜினி ஆசி தேவை... ரசிகர்கள் வர வேண்டும் என்று ஓபனாகவே அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.. திமுகவுக்கு செல்லும் ரசிகர்களை தன்பக்கம் இழுக்க பிளான் போட்டு வருகிறார்.. ரஜினியின் ஆதரவையும் அதாவது வாய்ஸ் வேண்டும் என்று கேட்கிறார்..
ஆன்மீக அரசியல்
அர்ஜூன் சம்பத்தும் ரஜினியின் ஆன்மீக அரசியல் போகவில்லை... இன்னமும் இருக்கிறது. அவரும் இருப்பார் என்கிறார்... இவர்கள் எல்லாருமே ரஜினி மீது அன்பை பொழிபவர்கள்தான்.. அளவுகடந்த மதிப்பையும், நம்பிக்கையையும் வைத்திருப்பவர்கள்தான்.. மறுப்பதற்கில்லை.. ஆனால், உடம்புக்கு முடியலை, என்னை விட்டுடுங்க என்று ஒருவர் சொல்லிவிட்ட பிறகும், இப்படி பின்னாடியே துரத்துவது அநாகரீகம் இல்லையா, மனிதாபிமானம்தானா?
மனிதாபிமானம்
இன்னும் சொல்லப்போனால், மற்றவர்களைவிட நெருங்கி பழகின இவர்களுக்குதானே ரஜினி மீது அக்கறை இருக்க வேண்டும்? அனைவரிடமும் வித்தியாசம் பாராமல் இனிமையாக பழகுவர் ரஜினி.. ஆனால், இருக்கிற அந்த ஒரு வாய்ஸை, அவர் யாருக்கென்றுதான் தருவார்? எல்லாரும் சேர்ந்து ஒருவரை இப்படி தர்மசங்கடத்துக்கு ஆளாக்கலாமா? ஒன்னும் சொல்வதற்கில்லை..!