உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டுவதா? கேரள அரசு மீது சீறும் ராமதாஸ்
சென்னை: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயலும் கேரள அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முல்லைப் பெரியாற்றில் தற்போதுள்ள அணையிலிருந்து 366 மீட்டர் கீழே புதிய அணை கட்டினால், இப்போதுள்ள அணை மற்றும் புதிதாக கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஏதேனும் சபாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து ஐதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
ஏதோ அவசரம் இருக்கு.. உதயநிதியை அமைச்சராக்கும் முதல்வர் ஸ்டாலின் பற்றி டிடிவி தினகரன் பரபர கருத்து!
அதை ஆய்வு செய்வதற்காக கேரள அரசால் அமைக்கப் பட்டிருந்த வல்லுனர் குழு தான், புதிய அணை கட்டுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என பரிந்துரைத்துள்ளது. வல்லுனர் குழுவின் பரிந்துரையை ஏற்று ரூ.1,500 கோடி செலவில் முல்லைப் பெரியாற்றில் புதிய அணையை கட்டுவதற்கு முடிவு செய்துள்ள கேரள அரசு, அதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணிகளையும் தொடங்கியுள்ளது.
நாடகமாடும் கேரள அரசு
கேரள அரசின் இந்த நடவடிக்கை ஒருபுறம் அப்பட்டமான உச்சநீதிமன்ற அவமதிப்பு என்றால், மற்றொருபுறம் திட்டமிடப்பட்ட நாடகமாகவும் இருக்கிறது. முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான தேவை எள்ளவும் ஏற்படவில்லை. முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கோரி கேரள அரசால் தொடரப்பட்ட வழக்கில் 2014-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலிமையாக உள்ளது. எனவே, புதிய அணை தேவையில்லை. மாறாக அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கேரள அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
திசைதிருப்பும் முயற்சி
முல்லைப்பெரியாற்று அணையின் அங்கமான பேபி அணை பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்டினால் மட்டும் தான் அணையை வலுப்படுத்த முடியும். ஆனால், கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசு பலமுறை கேட்டுக் கொண்ட பிறகும் கூட, அதற்கு கேரள அரசு அனுமதி அளிக்கவில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த நிலையில் தான், இந்த விவகாரத்தை திசை திருப்பும் நோக்கத்துடன் புதிய அணையை கட்டப்போவதாக கேரள அரசு தற்போது அறிவித்திருக்கிறது.புதிய அணை கட்டப்படுவதன் நோக்கமே, முல்லைப் பெரியாரு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படுவதை தடுக்க வேண்டும் என்பதுதான். இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.
யாரும் நம்பப்போவதில்லை
முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய கேரள அரசே ஒரு நிறுவனத்தை நியமிப்பதும், அந்நிறுவனத்தின் அறிக்கையை ஆய்வு செய்ய கேரள அரசே வல்லுனர் குழுவை அமைப்பதும், அதன் பரிந்துரையை கேரள அரசே ஏற்றுக் கொள்வதும் திட்டமிடப்பட்ட நாடகம் என்பதைத் தவிர வேறல்ல. இந்த நாடகத்தை எவரும் நம்ப மாட்டார்கள்.
"உறுதியான நடவடிக்கை வேண்டும்"
கேரள அரசின் இந்த நாடகத்தை தமிழக அரசு அம்பலப்படுத்த வேண்டும். பேபி அணை பகுதியில் உள்ள மரங்களை வெட்ட அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து அனுமதி பெற வேண்டும். அந்த மரங்களை அகற்றி அணையை வலுப்படுத்தும் பணிகளை விரைவாக முடித்து, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முன்பிருந்தவாறு 152 அடியாக உயர்த்த தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.