பாமகவுக்கு ஓட்டு போடாதீங்க.. ஸ்டாலின் கலைஞர் கடைசி வரை பாத்துகிட்டார்! கடித்தத்தில் ராமதாஸ் கண்ணீர்!
சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்திருக்கும் அன்புமணி ராமதாஸ் 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் அன்புமணி ஆதரவாளர்களுக்கு வாக்களிக்க கூடாது என கடிதம் எழுதி இருக்கிறார் ராமதாஸ். மேலும், "என் ரத்தமே எனக்கு விஷமானாலும், என் தொண்டர்களே எனக்கு மருந்தாவார்கள்!" எனவும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடித்தத்தில்," நேற்று நான் வெளியிட்ட வீடியோவைப் பார்த்துப் பலரும் கண்ணீர் வடித்தீர்கள், ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் மரண வேதனை எனக்கு மட்டுமே தெரியும்.
எப்போது அன்புமணி என் பேச்சைக் கேட்காமல், என் கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டுப் பணத்திற்காக அலையத் தொடங்கினாரோ, அன்றே ஒரு தந்தையாக நான் செத்துவிட்டேன். உங்களுக்காக நான் சிறை சென்றேன்.

ராமதாஸ் கடிதம்
ரத்தம் சிந்தினேன்; ஆனால் அன்புமணி இன்று அந்த ரத்தத்தைச் 'சமூக நீதி வியாபாரமாக' மாற்றிவிட்டார். ஒவ்வொரு தேர்தல் சீட்டையும் பல கோடிகளுக்கு விற்று, நம் சமுதாயத்தின் உரிமைகளை அன்புமணி அடகு வைத்துவிட்டார். பெற்ற அப்பனையே கவனிக்காத ஒருவன், உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு வேலை வாங்கித் தருவானா? தன் மனைவியையும் மகளையும் அதிகாரத்திற்காகப் பயன்படுத்தும் இவர், சாதாரணப் பாட்டாளிப் பெண்களுக்கு என்ன நன்மையைத் தருவார்?
ஸ்டாலின் கலைஞர்
தர்மபுரியில் சௌமியா வெற்றி பெற்றால், அந்தப் தர்மபுரி விரைவில் 'அதர்மபுரி' என்று பெயர் எடுக்கும். அரசியலில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், ஸ்டாலின் தன் தந்தை கலைஞர் சாகும் வரை கூடவே இருந்து கவனித்துக் கொண்டார். ஆனால், எனக்கு வாய்த்த பிள்ளையோ, நான் உயிரோடு இருக்கும்போதே என்னைச் செத்துப்போனதாக நினைத்து அரசியல் பண்ணுகிறார். இதைவிட ஒரு தகப்பனுக்குப் பெரிய அவமானம் என்ன இருக்க முடியும்?
அன்புமணி
மாம்பழம் இனிக்கும் என்று இனி நம்பாதீர்கள். அந்தச் சின்னத்திற்குள் இப்போது துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது. அந்த விஷத்தை முறியடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அன்புமணியின் துரோகக் கும்பலுக்கு ஒட்டுப் போடுவது, உங்கள் பெற்ற தகப்பன் தலையிலேயே நீங்கள் மண்ணள்ளிப் போடுவதற்குச் சமம். இந்த ராமதாஸ் தோற்கலாம், ஆனால் துரோகம் ஒருபோதும் ஜெயிக்கக் கூடாது. என் ரத்தமே எனக்கு விஷமானாலும், என் தொண்டர்கள் எனக்கு மருந்தாக இருப்பீர்கள் என நம்புகிறேன். அன்புமணி போட்டியிடும் இந்த 18 தொகுதிகளிலும் அவரது துரோகக் கும்பலை மண்ணைக் கவ்வச் செய்யுங்கள். தர்மம் ஜெயிக்கட்டும்!" என கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி
பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையே தொடர்ந்து மோதல் நிலவும் நிலையில் கட்சியை கைப்பற்றிய அன்புமணி பாஜக அதிமுக கூட்டணியில் இணைந்திருக்கிறார். அவருக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது மேலும் சட்டமன்ற தேர்தலில் 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. 18 தொகுதிகளிலும் பாமக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கின்றனர்.
சௌமியா அன்புமணி
அவர்களுக்கு ஆதரவாக அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி அவரது குடும்பத்தினர் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதற்கிடையே சசிகலாவுடன் கூட்டணி அமைத்துள்ள ராமதாஸ் 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். சசிகலா கிட்டத்தட்ட 40 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கும் நிலையில் தற்போது ராமதாஸ் சசிகலாவும் தங்கள் தரப்பு வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும், நிலையில் ராமதாஸ் இந்த கடிதத்தை எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications