சொந்த கட்சிக்காரர்களையே கட்டுப்படுத்த முடியாத எடப்பாடியுடன் போட்டியிட்டு வெல்ல முடியுமா?.. ராமதாஸ்
சென்னை: கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி பாமக தனித்து போட்டியிடுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது.
தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் கூட்டணி குறித்தும் ஆலோசனை நடத்த பாமகவின் உயர்நிலை கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
9 மாவட்டங்கள்
தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் வடமாவட்டங்கள், அவை பாமக செல்வாக்கு உள்ள மாவட்டங்களாகும். எனவே இந்த முறை நாம் தனித்தே போட்டியிடுவோம் என அந்த 9 மாவட்டங்களின் பாமக துணை பொதுச் செயலாளர்கள் தெரிவித்திருந்தனர்.
எதிர்த்து போட்டி
இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில் கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை. கடந்த தேர்தல்களில் அதிமுகவில் சீட்டு கிடைக்காதவர்கள் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் எதிர்த்து போட்டியிட்டனர். இதுகுறித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் முறையிட்ட போதும் அவரால் சொந்த கட்சியினரை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே சொந்தக் கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி வைத்தால் நம்மால் வெல்ல முடியுமா?
பாமகவுக்கு பலனில்லை
அதிமுகவுடன் தற்போது கூட்டணி வைத்தாலும் நமக்கு உரிய மரியாதை கிடைக்காது. சரியான தலைமை இல்லாததால் அதிமுக தொண்டர்கள் நமக்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு பல தொகுதிகளில் வென்று பாமகவின் வாக்கு சதவீதத்தை பலப்படுத்துவோம். பாமகவால் கூட்டணிக் கட்சிகள் பலனடைந்தன, ஆனால் கூட்டணியால் பாமகவுக்கு எந்த பலனும் இல்லை.
Recommended Video
ஒத்துழைப்பு தரவில்லை
கடந்த தேர்தல் பணிகளில் அதிமுக தொண்டர்கள் ஒத்துழைப்பு தரவில்லை. ஒரு வேளை இவர்கள் ஒத்துழைப்பு தந்திருந்தால் சட்டசபை தேர்தலில் தற்போது வெற்றி பெற்ற 4 தொகுதிகளை காட்டிலும் நிறைய தொகுதிகளில் வென்றிருக்கலாம் என ராமதாஸ் தெரிவித்திருந்தார். கடந்த சட்டசபைத் தேர்தலில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க பாமக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் இந்த உள்ஒதுக்கீட்டை அறிவித்தால் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை என பாமக திட்டவட்டமாக சொல்லிவிட்டது. இதையடுத்து முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியும் தேர்தல் பிரச்சாரத்தின் போது இடஒதுக்கீட்டை அறிவித்தார். பின்னர் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. மேலும் அன்புமணி ராமதாஸுக்கு மாநிலங்களவை எம்பி பதவியும் கிடைக்க அதிமுக எம்பிக்கள் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.