ராணிப்பேட்டை, திருவள்ளூரில் அதிகனமழை - 3 நாட்களுக்கு விடாது வெளுக்குமாம்
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, திருவள்ளூரில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார். சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. திருவள்ளூர் தொடங்கி கன்னியாகுமரி வரைக்கும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஆவடியில் 20 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 18 செமீ மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் ராணிப்பேட்டை, திருவள்ளூரில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருநெல்வேலி,தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தொடர்ந்து மிரட்டும் பருவ மழை.. தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. புவியரசன் தகவல்
சென்னையைப் பொருத்தவரைக்கும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் செய்தியாளர்களிடம் பேசிய புவியரசன் தெரிவித்துள்ளார்.
திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர்,பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, தென்காசி, கடலூர், புதுக்கோட்டை,டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கனமழையும் ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளைய தினம் வட கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போல அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
29ஆம் தேதியன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் புவியரசன் கூறியுள்ளார். சராசரி அளவை விட நடப்பாண்டு கூடுதலாக மழை பதிவாகியுள்ளதாகவும் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் இதுவரை 106 செமீ மழை பதிவாகியுள்ளதாகவும் புவியசரன் தெரிவித்துள்ளார்.