திடீரென வந்த போன்..தேதி குறித்த அண்ணாமலை! விசிக சங்கத்தமிழன் vs பாஜக அண்ணாமலை..களைகட்டும் கமலாலயம்!
சென்னை : தன்னுடன் விவாதம் நடத்த தயாரா? என தொலைபேசியில் தொடர்புகொண்டு கேள்வி எழுப்பிய விசிக நிர்வாகி சங்கத்தமிழனுக்கு 26ஆம் தேதி விவாதம் நடத்த தயாராக இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ள நிலையில், இதுகுறித்து தற்போதே பல்வேறு யூகங்கள் வெளியாகிய வருகின்றன.
அம்பேத்கரையும் பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா கருத்து வெளியிட்ட பிறகு அது தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் இடையே பலத்த எதிர்வினைகளை பெற்று வருகிறது.
இது குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பாரதிய ஜனதா கட்சிக்கு அம்பேத்காரை எந்த விதத்திலும் கொண்டாட அருகதை இல்லை என கடுமையாக பேசினார்.

அண்ணாமலை
திருமாவளவனின் இந்த கருத்துக்கு பதிலளித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, அம்பேத்கர் குறித்து பாஜக கொண்டாட என்ன தகுதி இருக்கிறது என்பது குறித்து திருமாவளவன் தேதி கொடுத்தால் நேரில் விவாதம் நடத்த தயார் என கூறியிருந்தார். இதற்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்த விடுதலைகள் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், "விளையாட்டு போட்டிகளில் கூட கேட்டகிரி இருக்கிறது. சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் என்று இருக்கிறது.

அரசியலில் சப் ஜுனியர்
மேலும், "அரசியலில் அண்ணாமலை ஒரு சப் ஜூனியர். அவரோடு விவாதிக்க அவரைப்போல ஒரு சப் ஜூனியரை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து அனுப்பி வைக்கிறேன்" என்று கூறினார். இந்த நிலையில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி சங்கத்தமிழன் என்பவர் ஒரு வீடியோவில், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு தொடர்பு கொண்டு பேசினார்.

விசிக நிர்வாகி
அந்த வீடியோவில் பேசியுள்ள சங்கத்தமிழன், '' 24ஆம் தேதி உங்களை நேரில் சந்திக்க முடியுமா? நேரில் விவாதம் செய்ய வேண்டும்.. அதற்குள் அம்பேத்கரின் தொகுப்பு நம்பர் 8 என்ற புத்தகத்தை படித்து வைத்திருங்கள்" என்று பேசினார். சங்கத்தமிழனுக்கு பதில் அளித்து பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, '' 24ம் தேதி மத்திய அமைச்சர் அமித் ஷா சென்னை வருவதால் பிஸியாக இருக்கிறேன்.. நீங்கள் 25 ஆம் தேதி போன் செய்து விட்டு, 26ம் தேதி அலுவலகம் வாங்கண்ணா நேரில் சந்திக்கலாம், நான் ஏற்கனவே அம்பேத்கரின் புத்தகத்தை படித்திருக்கிறேன்.." என்று பதில் அளித்தார்.

விவாதத்திற்கு தேதி
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், நாளை மறுநாள் விவாதம் நடக்குமா? என பலரும் பலத்த எதிர்ப்பார்ப்போடு உள்ளனர். அதே நேரத்தில் திருமாவளவனுக்கு பல பாஜக நிர்வாகிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களுடன் விவாதத்திற்கு வர முடியுமா என கேள்வி எழுப்பி வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. விவாதம் குறித்த செய்திகள் காரணமாக கமலாலயம் களைகட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications