பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் இரும்பு, சிமெண்ட் விலையும் உயர்வு! வீதிக்கு வந்த கட்டுமான அமைப்பினர்
சென்னை: இரும்பு மற்றும் சிமெண்ட் விலை உயர்வால் கட்டுமான தொழில் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
கட்டுமான பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், பதிவு கட்டணம் மற்றும் முத்திரைத்தாள் போன்றவற்றின் கட்டணங்களை குறைக்க கோரியும் கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பின் செயலாளர் யுவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இரும்பு சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், கட்டுமான பொருட்களுக்கு விலை நிர்ணயக் குழு அமைக்க வேண்டும் எனவும், அங்கீகாரமற்ற மனைகளை வரைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் தலைவர் பொன்குமார்: கட்டுமானம் முழுவீச்சில் நடைபெறாத போது எப்படி விலை உயரும் என கேள்வி எழுப்பினார். இரும்பு மற்றும் சிமெண்ட் விலை உயர்வால் கட்டுமான தொழில் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் மத்திய மாநில அரசு உடனடியாக தலையிட்டு விலை உயர்வை குறைக்க வேண்டும் என்றார்.
மத்திய பட்ஜெட்டில் இதுபற்றி எந்த அறிவிப்பும் இல்லை, டீசல் பெட்ரோல் விலை உயர்வால் கட்டுமான பொருட்கள் விலை இயற்கையாக விலை உயர்கிறது. அரசு தனி கவனம் செலுத்தி விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.