ரெக்கார்ட்: 122 வருடங்களில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் ஹெவி ரெய்ன்.. 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை
இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: கடந்த 122 வருடங்களில் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், தென்மேற்கு பருவ மழை காலத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக, மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... அத்துடன் ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று, தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நம் இந்தியாவை பொறுத்தவரை, இந்தியாவில் ஒவ்வொரு வருடமும், தென்மேற்கு பருவ மழையானது ஜுன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நிறைவடைகிறது.
இந்த 4 மாதங்களில் பெய்யும் மழையைதான், நம் நாட்டு விவசாயிகள் அளவுக்கு அதிகமாகவே நம்பிக்கிடக்கிறார்கள்.
சென்னையை புரட்டி எடுத்த மழை.. பல மாவட்டங்களில் பரவலாக மழை.. இன்று எங்கெல்லாம் பெய்யும்?
பருவ மழை
அதன்படியும் இந்த வருடமும், இந்த மழையைத்தான் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.. ஆனால், இந்த வருடம் தென்மேற்கு பருவ மழைக்காலம், முன்கூட்டியே ஆரம்பித்துவிட்டது.. தென்மேற்கு பருவ மழையானது கடந்த மே 16-ம் தேதி தெற்கு வங்கக்கடல், அந்தமான் கடல், அந்தமான் நிகோபார் தீவுகளில் தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையமும் அப்போது தெரிவித்திருந்து.. இந்த தென்மேற்கு பருவ மழையானது, நிறைவடையும் நிலைமைக்கு வந்துவிட்டது..
122 வருடங்கள்
இந்நிலையில், தென்மேற்கு பருவ மழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் 477 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இந்த மழைப்பொழிவானது, இயல்பான அளவை விட 45 சதவீதம் அதிகமாம்.. எப்போதுமே, தமிழகம், புதுவையில் தென்மேற்கு காலத்தில் 328 மி.மீ மழைதான் பதிவாகும்.. ஆனால், இந்த வருடம் அப்படி இல்லை. கடந்த 122 வருடங்களில், தென்மேற்கு பருவ மழை காலத்தில் பெய்த மழை அளவுகளில் இதுதான் அதிகபட்சம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 மாவட்டங்கள்
மொத்தம் 11 மாவட்ட மிக அதிக மழையும், 16 மாவட்டங்களில் அதிக மழையும், 9 மாவட்டங்களில் இயல்பான மழையும், 4 மாவட்டங்களில் குறைவான மழையும் பதிவாகி உள்ளதாம்.. இதனிடையே, இன்றைய தினம் 6 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய உள்ளதாக கூடுதல் தகவலையும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.. ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வார்னிங்
இதைதவிர, அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் சென்னையை பொறுத்தவரை, 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. அத்துடன், தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கை கடற்கரை பகுதிகள், தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இன்று அங்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.